பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்..விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்!
![]()
திருவள்ளூரில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான உள்ளூர் மற்றும் உள்ளக குழுத் தலைவர், உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கி பேசினார்.
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் விதமாக சட்டத்தின் அடிப்படையில், உள்ளூர் மற்றும் உள்ளக குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் அரசு அலுவலகங்கள்,நிறுவனங்கள்,பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ளக குழு அமைத்து, வரப்பெறும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உள்ளூர் குழு அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு துறை,சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு, பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் அநேக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இச்சட்டத்தின் வழியாக வரப்பெறும் விண்ணப்பங்களை உரிய காலத்தில் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. புகார்தாரர்கள் சம்பவம் நடந்து 3 மாதங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும்.
ஏற்புடைய சரியான காரணம் இருப்பின் காலதாமதமாக அளிக்கப்படும் புகாரை ஏற்று நடவடிக்கை மேற்கொள்ளலாம். இச்சட்டத்திற்கென மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள She – Box Portal உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த இணை வழியாகவும் மனுதாரரால் விண்ணப்பங்கள் அளிக்கலாம். புகார்தாரர் கோருவரானால் விசாரணைக்கு முன்னதாக சமரச நடவடிக்கை மேற்கொள்ளலாம். பாதிக்கப்பட்ட நபர் மாற்றுத்திறனாளியாக இருக்கும் பட்சத்தில் அவரின் சட்டப்பூர்வ வாரிசுதாரர் புகார் அளிக்கலாம். பாதிப்பு ஏற்படுத்திய மற்றும் பாதிக்கப்பட்ட நபருக்கு விசாரணை அறிக்கை அளிக்கப்பட வேண்டும். புகார் பெற்ற 90 நாட்களுக்குள் விசாரணை நடவடிக்கைகள் முடிக்கப்பட வேண்டும்.
விசாரணை குழுவின் அறிக்கையின்படி சார்ந்த துறை மூலமாக அல்லது காவல் நிலையத்தின் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளலாம். சட்டத்தினை நன்கு ஆராய்ந்து வரப்பெறும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், தங்களது அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, இச்சட்டம் குறித்தான விழிப்புணர்வை மாதத்திற்கு ஒரு முறை உள்ளக புகார் குழு தலைவர்கள், உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கூறினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006-விழிப்புணர்வு உறுதிமொழியினை உள்ளூர் மற்றும் உள்ளக குழுத் தலைவர்,உறுப்பினர்கள் ஆகியோர் எடுத்துக்கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் சோ.வனிதா தனியார் தொண்டு நிறுவன தலைவர் ரம்யா நிசால், அகல்யா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

