வெங்கையா நாயுடு – தேசத்தின் சேவைக்காகவாழ்க்கையை அர்ப்பணித்தவர்– பிரதமர் திரு நரேந்திர மோடி

Loading

வெங்கையா நாயுடு – தேசத்தின் சேவைக்காகவாழ்க்கையை அர்ப்பணித்தவர்– பிரதமர் திரு நரேந்திர மோடி

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் துணைத்தலைவரும்,
மதிப்பிற்குரிய மூத்த அரசியல் பிரமுகருமான திரு எம்.வெங்கையா
நாயுடு இன்று 75 வயதை நிறைவு செய்து தமது பிறந்தநாளைக்
கொண்டாடுகிறார். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கையை
வாழ இந்தத் தருணத்தில் நான் வாழ்த்துகிறேன். அவரது நலம்
விரும்பிகள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அர்ப்பணிப்பு, தகவமைப்பு
மற்றும் பொது சேவையில் அசைக்க முடியாத உறுதி ஆகியவற்றை
வெளிப்படுத்தும் ஒரு தலைவராகத் திகழும் திரு வெங்கையா
நாயுடுவை நாம் போற்றிக் கொண்டாட இது ஒரு சிறந்த தருணமாகும்.
அரசியல் அரங்கில் அவரது ஆரம்ப நாட்கள் முதல் குடியரசுத்
துணைத்தலைவராக பதவி வகித்த காலம் வரை, வெங்கையா நாயுடு
அவர்களின் வாழ்க்கை, அரசியல் சிக்கல்களை எளிதாகக் கையாண்டு,
பணிவாக வழிநடத்துவதாக அமைந்திருந்தது. இது அவரது
தனித்துவமான திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. அவரது
பேச்சுத்திறன், அறிவுத்திறன், தேச வளர்ச்சியில் உறுதியான நோக்கம்
ஆகியவை கட்சி எல்லைகளைக் கடந்து அவருக்கு நல்ல
மரியாதையைப் பெற்றுத் தந்துள்ளன.

வெங்கையா நாயுடு அவர்களும், நானும் பல ஆண்டுகளாக
ஒருவருக்கொருவர் நல்ல நட்பில் உள்ளோம். நாங்கள் ஒன்றாக
பணியாற்றியுள்ளோம். நான் அவரிடமிருந்து நிறைய
கற்றுக்கொண்டிருக்கிறேன். அவரது வாழ்க்கையில் முக்கியமான
விஷயம் என்னவென்றால், அது மக்கள் மீதான அன்பு. மாணவர்

தலைவராக ஆந்திராவில் அவரது அரசியல் செயல்பாடு தொடங்கியது.
அவரது திறமை, பேச்சுத்திறன், பிறரை ஒருங்கிணைத்து வழிநடத்தும்
திறன்கள் போன்றவை அபாரமானவை. இந்தத் திறன்களுக்காக அவர்
எந்த அரசியல் கட்சியாலும் வரவேற்கப்படுவார். ஆனால் அவரோ
தேசமே முதன்மையானது என்ற நோக்கத்தைக் கொண்டிருந்ததால் சங்
பரிவார அமைப்புகளில் இணைந்து பணியாற்ற விரும்பினார்.
ஆர்எஸ்எஸ், ஏபிவிபி, ஜனசங்கம், மற்றும் பிஜேபி-யில் இணைந்து
அவர் செயல்பட்டார்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் அவசரநிலை
அமல்படுத்தப்பட்டபோது, இளைஞராக இருந்த வெங்கையா நாயுடு
அவர்கள், அவசரநிலை எதிர்ப்பு இயக்கத்தில் தன்னை முழுவதுமாக
இணைத்துக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்டார். லோக்நாயக் ஜெயப்
பிரகாஷ் நாராயணனை ஆந்திராவுக்கு அழைத்ததால் அவர் சிறையில்
அடைக்கப்பட்டார். ஜனநாயகத்தின் மீதான இந்த அர்ப்பணிப்பை அவரது
அரசியல் வாழ்க்கையில் எப்போதுமே காணலாம். 1980-ம் ஆண்டுகளின்
நடுப்பகுதியில், ஆந்திராவில் என்.டி.ராமாராவின் அரசு, மத்திய
காங்கிரஸ் அரசால் முறையற்ற வகையில் பதவி நீக்கம்
செய்யப்பட்டபோது, வெங்கையா நாயுடு ஜனநாயக கொள்கைகளைப்
பாதுகாப்பதில் முன்னணியில் இருந்து தீவிரமாகச் செயல்பட்டார்.
வெங்கையா நாயுடு அவர்கள், மிகவும் வலிமையான அரசியல்
அலைகளைக் கூட எளிதாக எதிர் கொண்டு வெற்றி பெற்றுள்ளார். 1978-
ம் ஆண்டில், ஆந்திர மாநிலமே காங்கிரஸுக்கு வாக்களித்தது. ஆனால்
அந்தச் சூழலிலும்கூட வெங்கையா நாயுடு தாம் போட்டியிட்ட
தொகுதியில் காங்கிரஸ் ஆதரவு அலையை முறியடித்து இளம்
சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து
ஆண்டுகளுக்குப் பிறகு, என்.டி. ராமாராவ் அலை மாநிலத்தில்
எழுந்தபோதும் வெங்கையா நாயுடு பிஜேபி சட்டப்பேரவை

உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அவர் ஆந்திர
மாநிலம் முழுவதும் பிஜேபி-யின் வளர்ச்சிக்கு வழி வகுத்தார்.
வெங்கையா நாயுடு அவர்களின் பேச்சைக் கேட்ட அனைவரும் அவரது
பேச்சாற்றலைப் பாராட்டுவார்கள். அவர் நிச்சயமாக வார்த்தை
வித்தகர். அவர் வேலையில் கவனம் செலுத்தும் ஒரு
உழைப்பாளரும்கூட. இளம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த
நாட்களில், சட்டமன்ற விவகாரங்களில் அவர் சிறப்பாகச்
செயல்பட்டதற்காகவும், தமது தொகுதி மக்களின் நலனில் கவனம்
செலுத்தியதற்காகவும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். என்.டி.
ராமாராவ் போன்றவர்கள் அவரது திறமையைக் கவனித்து, அவரை,
அவர்களது கட்சியில் இணைத்துக் கொள்ள விரும்பினர், ஆனால்
வெங்கையா நாயுடு அவர்கள் அவரது அடிப்படை சித்தாந்தத்திலிருந்து
விலக உறுதியாக மறுத்துவிட்டார். ஆந்திராவில் பிஜேபி-யை
வலுப்படுத்துவதிலும், கிராமங்களுக்குச் சென்று பணியாற்றுவதிலும்,
அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைப்பதிலும் அவர் பெரும்
பங்கு வகித்தார். சட்டப்பேரவையில் கட்சியை வழிநடத்திய அவர்,
ஆந்திர பிஜேபி தலைவராகவும் ஆனார்.

1990-ம் ஆண்டுகளில்தான் பிஜேபி-யின் மத்தியத் தலைமை
வெங்கையா நாயுடு அவர்களின் பணிகளைக் கவனித்தது. 1993-ம்
ஆண்டில் அவர் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக
நியமிக்கப்பட்டபோது தேசிய அரசியலில் தமது பணியைத் திறம்படத்
தொடங்கினார். இளைஞராக இருந்தபோது, அடல் பிகாரி வாஜ்பாய்
அவர்கள் மற்றும் அத்வானி அவர்களை பிரமிப்புடன் பார்த்த ஒரு
மனிதர் அவர்களுடன் நேரடியாக பணியாற்றுவது உண்மையிலேயே
ஒரு மிகச் சிறந்த தருணம். பொதுச் செயலாளராக, எங்கள் கட்சியை
அதிகாரத்திற்கு கொண்டு வருவது மற்றும் தேசத்தின் முதல் பிஜேபி

பிரதமரை பொறுப்பேற்க வைப்பது ஆகியவற்றில் அவர் தீவிர கவனம்
செலுத்தினார். கட்சியின் தேசியத் தலைவராகவும் அவர் உயர்ந்தார்.
2000-வது ஆண்டில், அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், வெங்கையா
நாயுடு அவர்களை அமைச்சராக்க முன்வந்தபோது வெங்கையா நாயுடு
அவர்கள் உடனடியாக ஊரக வளர்ச்சி அமைச்சக பொறுப்பை ஏற்க
விரும்புதாகத் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். பிற துறைகளை
விடுத்து இந்தத் துறையை அவர் தேர்வு செய்தது, அடல் பிகாரி
வாஜ்பாய் உட்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுக்கு எந்த இலாகா வேண்டும்
என்று அவரிடமே கேட்டு அது அவருக்குக் கொடுக்கப்பட்டது.
வெங்கையா நாயுடு அவர்களின் முதல் தேர்வு கிராமப்புற வளர்ச்சி
என்பதாகவே இருந்தது. வெங்கையா நாயுடு அவர்கள் மிகத் தெளிவாக
இருந்தார். அவர் ஒரு விவசாயி. அவர் தமது ஆரம்ப நாட்களை
கிராமங்களில் கழித்தார். எனவே, அவர் கிராமப்புற வளர்ச்சிக்கு
முக்கியத்துவம் அளித்துப் பணியாற்ற விரும்பினார். அவர் அந்தத்
துறையின் அமைச்சராக இருந்தபோது, பிரதமரின் கிராமச் சாலைகள்
திட்டத்தை உருவாக்குவதிலும், செயல்படுத்துவதிலும் முக்கியப் பங்கு
வகித்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2014-ம் ஆண்டு தேசிய
ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றபோது, நகர்ப்புற வளர்ச்சி,
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு ஆகிய முக்கிய
இலாகாக்களுக்கு அவர் பொறுப்பு வகித்தார். அவர் அந்தப் பதவியில்
இருந்த காலத்தில்தான் தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் நகர்ப்புற
வளர்ச்சி தொடர்பான முக்கியமான திட்டங்களை நாங்கள்
தொடங்கினோம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்காக நீண்ட
காலமாக மிகச் சிறப்பாகப் பணியாற்றிய தலைவர்களில் வெங்கையா
நாயுடு மிக முக்கியமானவர் ஆவார்.

தில்லிக்கு வருவதற்கு முன்பு நான் குஜராத்தில் பணியாற்றினேன். 2014-
ம் ஆண்டில் நான் தில்லிக்கு வந்தபோது நான் ஒரு வெளியூர் நபராக
உணர்ந்தேன். அதுபோன்ற காலங்களில், வெங்கையா நாயுடு
அவர்களின் நுண்ணறிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவர்
நாடாளுமன்ற விவகார அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டார்.
கட்சிகளுக்கு இடையே ஒத்துழைப்புக்கு அவர் முக்கியத்துவம்
அளித்தார். ஆனால் அதே நேரத்தில் நாடாளுமன்ற விதிமுறைகள்
மற்றும் விதிகள் என்று வரும்போது ஒரு கோட்டை வரைந்து அதிலும்
தெளிவாகவும் உறுதியாகவும் அவர் செயல்பட்டார்.

2017-ம் ஆண்டில் எங்கள் கூட்டணி குடியரசுத் துணைத்தலைவர்
வேட்பாளராக அவரை அறிவித்தது. அப்போது நாங்கள் ஒரு
சங்கடத்தை எதிர்கொண்டோம். அதாவது, வெங்கையா நாயுடு
அவர்களின் பொறுப்புகளை எவ்வாறு கவனித்து அந்த இடத்தை
நிரப்புவது என்பதைப் பற்றி நாங்கள் சிந்தித்தோம். ஆனால் அதே
நேரத்தில், குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்கு அவரை விட சிறந்த
வேட்பாளர் யாரும் இல்லை என்பதையும் நாங்கள் அறிந்திருந்தோம்.
அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா
செய்தபோது அவர் ஆற்றிய உரைகளில் ஒன்றை என்னால்
ஒருபோதும் மறக்க முடியாது. கட்சியுடன் தாம் கொண்டிருந்த
தொடர்பையும் கட்சியைக் கட்டியெழுப்ப மேற்கொண்ட
முயற்சிகளையும் அவர் நினைவு கூர்ந்தபோது அவரால் கண்ணீரைக்
கட்டுப்படுத்த முடியவில்லை. இது அவரது ஆழமாக வேரூன்றிய
அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.
குடியரசுத் துணைத்தலைவரான பிறகு, அவர் அந்தப் பொறுப்பிலும்
பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அது அந்த
அலுவலகத்தின் கண்ணியத்தை மேலும் உயர்த்தியது. இளம்நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெண் உறுப்பினர்கள் மற்றும் முதல்முறை உறுப்பினர்கள் பேசுவதற்கான வாய்ப்பைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், மாநிலங்களவையின் சிறந்த தலைவராகவும்
அவர் செயல்பட்டார். அவைக்கு வருவதற்கு அவர் அதிகமுக்கியத்துவம் அளித்தார். நாடாளுமன்றக் குழுக்களை மிகவும்திறன்மிக்கவையாக மாற்றினார், அவையில் விவாதங்களையும் அவர்அதிகரித்தார்.

370 மற்றும் 35 (ஏ) பிரிவுகளை நீக்குவதற்கான முடிவு
மாநிலங்களவையில் வைக்கப்பட்டபோது, வெங்கையா நாயுடு
அவர்கள்தான் அவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் ஒன்றுபட்ட இந்தியா என்ற
கனவால் ஈர்க்கப்பட்ட இளைஞரான வெங்கையா நாயுடு, அந்தக் கனவு
இறுதியாக நிறைவேறியபோதும் அவைத் தலைவர் நாற்காலியில்
அமர்ந்திருந்தார்.
வெங்கையா நாயுடு அவர்கள் தமது பொறுப்புகள் மற்றும் அரசியல்
தவிர, ஒரு ஆர்வமுள்ள வாசகர் மற்றும் எழுத்தாளரும் ஆவார்.
தில்லியில் உள்ள மக்களுக்கு, தெலுங்குக் கலாச்சாரத்தை அறிமுகம்
செய்த நபராக அவர் அறியப்படுகிறார். அவரது உகாதி மற்றும்
சங்கராந்தி நிகழ்ச்சிகள் தில்லியில் மிகவும் நேசத்துக்குரியவைகளில்
ஒன்றாகும். வெங்கையா நாயுடு அவர்கள் உணவை நேசிப்பவராகவும்,
மக்களை உபசரிப்பவராகவும் இருந்து வருகிறார். அவரது சுயக்
கட்டுப்பாடும் அனைவருக்கும் தெரியும். உடல் ஆரோக்கியத்துக்கு
அவரது அர்ப்பணிப்பையும் ஆர்வத்தையும், அவர் இன்னும்
பேட்மிண்டன் விளையாடுவதிலும், அவரது விறுவிறுப்பான நடைப்
பயிற்சியிலும் நாம் காணலாம்.
குடியரசுத் துணைத்தலைவராக பதவியில் இருந்த பிறகும்,
வெங்கையா நாயுடு அவர்கள் பொது வாழ்க்கையில் சுறுசுறுப்பாகஈடுபட்டு வருகிறார். நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு
நிகழ்வுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து, அவர் என்னுடன்
பேசுகிறார். அண்மையில் இந்த அரசு மூன்றாவது முறையாகப்
பதவிக்கு வந்தபோது அவரைச் சந்தித்தேன். அவர் அதில் மிகுந்த
மகிழ்ச்சியடைந்தார். எனக்கும் எங்கள் அமைச்சரவைக்
குழுவினருக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

வாழ்வில் மைல்கல் சாதனையை எட்டியுள்ள வெங்கையா நாயுடு
அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளை தெரிவித்துக்
கொள்கிறேன். இளம் தொண்டர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
பிரதிநிதிகள் மற்றும் சேவை செய்ய ஆர்வமுள்ள அனைவரும்
வெங்கையா நாயுடு அவர்களின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டு
அதைப் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன். இவரைப்
போன்றவர்கள்தான் நமது நாட்டை சிறந்த நாடாகவும்,
துடிப்பானதாகவும் உருவாக்குகிறார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *