டிரைவரை செருப்பால் அடித்த விவகாரம்: 4 பேர் மீது வழக்குப்பதிவு!
டிரைவரை செருப்பால் அடித்த விவகாரம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட போக்குவரத்து உதவிமேலாளர் மாரிமுத்து உள்பட 4 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் செல்லும் அரசு பஸ் பயணிகளை ஏற்றி வெகு நேரம் ஆகியும் பேருந்து எடுப்பதற்கு தாமதமானதால் பஸ்சில் இருந்த பயணிகள் டிரைவர் கணேசனிடம் கேட்டபோது மேலாளர் கூறினால் மட்டும்தான் பேருந்து எடுத்துச் செல்ல முடியும் என கூறினார்.
இதையடுத்து உதவி மேலாளர் மாரிமுத்து அங்கு வந்த ஓட்டுநர் கணேசனை கடுமையாக திட்டியபடி அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று உதவி மேலாளர் டிரைவர் கணேசனை செருப்பால் அடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசு பஸ் டிரைவர்கள் சங்கத்தினரும் பயணிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் போக்குவரத்து உதவி மேலாளர் மாரிமுத்துவை சஸ்பெண்ட் செய்து மதுரை மண்டல போக்குவரத்து நிர்வாக இயக்குநர் நடவடிக்கை எடுத்தார். அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாரிமுத்து மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்.
இந்நிலையில், டிரைவரை செருப்பால் அடித்த விவகாரம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட போக்குவரத்து உதவிமேலாளர் மாரிமுத்து உள்பட 4 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.