உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை திறப்பு..சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்!
+2 மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டலுக்காக,சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்,உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.
+2 மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டலுக்காக மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ், +2 முடித்த மாணவர்கள், அனைவரும் உயர்கல்வியில் சேர்வதனை உறுதி செய்திடும் பொருட்டும், மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான வழிகாட்டுதலுக்காகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக தரைத்தளத்தில், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அருகில் மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் கூறியதாவது:
உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை என்பது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் உயர்கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் ஓரிடத்தில் பெறுவதற்காக அமைக்கப்பட்டதாகும். தற்போதைய, காலகட்டத்தில் எண்ணற்ற உயர்கல்வி வாய்ப்புகள் உள்ளன. பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ தொடர்பான படிப்புகள் மற்றும் எந்தப்படிப்பு சிறந்தது, எந்தக் கல்லுாரியில் சேர்வது, அதற்கான நுழைவுத்தேர்வுகள் என்னென்ன, அதற்கான உதவித்தொகைகள் எங்கு கிடைக்கும் போன்ற தகவல்களை மாணவர்கள் எளிதில் பெற இக்கட்டுப்பாட்டு அறை உதவுவதற்கும் அடிப்படையாக அமைக்கப்பட்டுள்ளது. தவறான அல்லது முழுமையற்ற தகவல்களால் மாணவர்கள் தவறான முடிவுகளை எடுப்பதையும் இதன் மூலம் தவிர்க்கலாம். இக்கட்டுபாட்டு அறையானது வருகின்ற அக்டோபர் மாதம் வரை செயல்படும்.
மேலும், உயர்கல்வி தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் வருகை புரிந்தோ அல்லது 04575-246225 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9487171986 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.