மூளை முதுகுத்தண்டு, எலும்பியல் அறுவைசிகிச்சைகளுக்காக O-ARM சாதனம்..காவேரி மருத்துவமனையில் அறிமுகம்!
காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனை மேம்பட்ட மூளை, முதுகுத்தண்டு மற்றும் எலும்பியல் அறுவைசிகிச்சைகளுக்காக நேவிகேஷன் சிஸ்டம் உடன் கூடிய O-ARM சாதனத்தை சென்னையில் முதன்முறையாக அறிமுகம் செய்திருக்கிறது.
இஸ்ரோ அமைப்பின் தலைவர் டாக்டர். V நாராயணன், காவேரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு O-ARM அறுவைசிகிச்சை சாதனத்தை தொடங்கி வைத்தார்.
சென்னை, காவேரி மருத்துவமனையின் மூளை & முதுகுத்தண்டிற்கான அறுவைசிகிச்சை தலைமை நிபுணரும், நரம்பு அறிவியல் துறையின் இயக்குநருமான டாக்டர். ரங்கநாதன் ஜோதி, O ARM சாதனம் குறித்து பேசுகையில், “மூளை-நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்களான நாங்கள், மூளை மற்றும் முதுகுத்தண்டு பகுதிகளில் அடிக்கடி அறுவைசிகிச்சைகளை மேற்கொள்கிறோம்; இதில் துல்லியம் என்பது வெறுமனே முக்கியமானது மட்டுமல்ல; துல்லியம்தான் அனைத்துமே. நாங்கள் அறுவைசிகிச்சை செய்யும்போது உடல் அமைப்பை மிகத்தெளிவாகவும், விரிவாகவும் காண்பதற்கு O ARM எங்களுக்கு உதவுகிறது. சிகிச்சையின் விளைவில் கணிசமான மாற்றத்தை இது செய்கிறது.
கையில் ஒரு 3D படத்தை வைத்துக் கொண்டு அறுவைசிகிச்சையை செய்வது போன்றது இது. சிக்கலான முதுகுத்தண்டு ஊனத்தை சரிசெய்தல், புற்றுக்கட்டிகளை வெட்டி அகற்றுதல் மற்றும் மிக குறைவான ஊடுருவலுள்ள செயல்முறைகள் ஆகியவற்றை இந்த O-ARM சாதனத்தின் மூலம் அதிக துல்லியத்தோடும், நம்பிக்கையுடனும் இப்போது செய்ய முடியும். இது வெறுமனே ஒரு தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல; எமது நோயாளிகளுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் கவசம் என்றே இதைக் கூறலாம். சென்னையில் மூளை நரம்பியல் அறுவைசிகிச்சையில் ஒரு மாபெரும் பாய்ச்சலை இது குறிக்கிறது” என்று கூறினார்..