100 நாள் வேலை வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!
![]()
மேல் நல்லாத்தூர் ஊராட்சியில் அடிப்படை வசதி, 100 நாள் வேலை வழங்க கோரி கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிபொதுமக்களுடன் இணைந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஊராட்சியில் சுமார் 1800 குடும்பங்களைச் சேர்ந்த 7500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகர்புறமாக மாறிவரும் மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்னும் நூறு நாள் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டன.இதனால் அப்பகுதிவாசிகள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்ப்பட்டனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மேல் நல்லாத்தூர் ஊராட்சியில் அடிப்படை வசதியும் 100 நாள் வேலை வழங்கிடக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் 100 நாள் அட்டை உள்ள 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 100 நாள் வேலையை வழங்க வேண்டும். 2024-2025-ல் 100 நாள் வேலை செய்தவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 6 மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரியிடம் வழங்கினர். அவர், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.

