விகடன் இணையதள முடக்க விவகாரம்..மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Loading

விகடன் இணையதளம் முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரதசக்ரவர்த்தி உத்தரவிட்டுள்ளார். மேலும் அதேசமயம் சம்பந்தப்பட்ட கார்ட்டூனை பிளாக் செய்யுமாறு விகடன் நிறுவனத்துக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அருகில் பிரதமர் மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பதைப் போன்று கார்ட்டூன் ஒன்று விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.இதையடுத்து இந்த கார்ட்டூன் தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், விகடனின் இணையதளம் கடந்த 15-ந்தேதி முடக்கப்பட்டது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை.

அதனை தொடர்ந்து மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அளித்த பரிந்துரையின்படி, விகடன் பத்திரிகையின் இணையதளம் இந்தியாவில் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விகடன் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பரதசக்ரவர்த்தி முன்பு நடைபெற்றது.
அப்போது ஆனந்த விகடன் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி வாதிட்டார். மேலும் இது ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் அவர் வாதிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இணையதளம் முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அதேசமயம் சம்பந்தப்பட்ட கார்ட்டூனை பிளாக் செய்யுமாறு விகடன் நிறுவனத்துக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

0Shares