கரூர் கூட்டநெரிசல்: ஒரு பெண் மட்டும் அடையாளம் காணப்படவில்லை!

Loading

கரூர் கூட்டநெரிசலில்உயிரிழந்தவர்களில் ஒரு பெண் மட்டும் அடையாளம் காணப்படவில்லை என்று கரூர் – திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய், சனிக்கிழமை தோறும் பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார். முதல் கட்டமாக திருச்சி, அரியலூரில் பிரசாரத்தை தொடங்கிய அவர், 3-வது கட்டபிரசாரத்தை நாமக்கல்லில் நேற்று தொடங்கினார். அதனைத்தொடர்ந்து அங்கு பிரசாரத்தை முடித்துக்கொண்டு கரூர் புறப்பட்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று அவரை காண நேற்று காலை முதலே அந்த கட்சியின் தொண்டர்கள் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர்.

இதனையடுத்து நடந்த கூட்டநெரிசலின் காரணமாக ஏராளமானவர்கள் மயங்கி விழுந்தனர். பெரும்பாலானவர்கள் சுமார் 6 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் ஆவார்கள். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 39 பேர் பலியானார்கள். இதில் 10 பேர் குழந்தைகள், 17 பேர் பெண்கள், 12 பேர் ஆண்கள் ஆவர்.

இந்த சம்பவம் தொடர்பாக கரூர் – திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் கூறுகையில், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 39 பேரில் 38 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 14 உடல்களுக்கு போஸ்ட் மார்டம் செய்யப்பட்டு, உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். 51 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் மட்டும் கவலைக்கிடமாக உள்ளார். மொத்தமாக 111 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். எவ்வளவு விரைவாக இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்க முடியுமா அதனை செய்வோம். உயிரிழந்த 39 பேரில் ஒரு பெண்ணின் உடல் மட்டும் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அடையாளம் காணப்படும்” என்று அவர் கூறினார்.

0Shares