ஈரான் மீதான பொருளாதார தடை – கடைசி முயற்சியும் தோல்வி!
ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை விதித்தது தொடர்பாக ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
, 2015-ல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்காசிய நாடான ஈரான், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை தடுக்கும் நோக்கில் ஒப்பந்தம் செய்தன. பின்னர் அது ரத்து செய்யப்பட்டதுடன் ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இந்தத் தடையை நீக்குவது தொடர்பாக பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன ஆனால், இதில் முடிவு ஏதும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள், ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகள் விதிப்பதற்கான ‘ஸ்னாப்பேக்’ திட்ட செயல்முறைகளை துவக்கின.
இந்த நிலையில் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிப்பதா அல்லது நிரந்தரமாக தடைகளை நீக்குவதா என்பது குறித்த வரைவு தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளின் வாக்கெடுப்புக்காக முன் வைக்கப்பட்டது . அப்போது ஓட்டெடுப்பில் ரஷியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிராக வாக்களித்தன. இதையடுத்து, வரைவுத் தீர்மானம் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதை ஆறு மாதங்கள் தாமதப்படுத்த கோரி நேற்று ரஷியா மற்றும் சீனா கொண்டு வந்த வரைவு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது. இதன்படி ரஷியா, சீனாவின் கடைசி முயற்சியும் தோல்வியடைந்தது. இதையடுத்து ‘ஸ்னாப்பேக்’ திட்ட செயல்முறையின்படி ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நாளை மீண்டும் அமலுக்கு வர உள்ளது.