எட்டயபுரம் இளநிலை உதவியாளர் மற்றும் பொறுப்பு சார்பதிவாளர்மீது பதிவுத்துறை நடவடிக்கை எடுக்குமா?
எட்டயபுரம் இளநிலை உதவியாளர் மற்றும் பொறுப்பு சார்பதிவாளர்மீதுநடவடிக்கை எடுக்கவேண்டும் .
பதிவுத்துறை தலைவருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் அவர்களுக்கு (தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதி பொதுமக்களின் நலன் கருதி) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் பொதுமக்களிடம் பதிவு துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் தமிழ்நாடு பதிவுத்துறை நெல்லை மண்டலம், பாளையங்கோட்டை பதிவு மாவட்டம், எட்டயபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் திரு. விக்னேஷ் அவர்களின் செயலை கண்டித்தும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவுத்துறையை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு பதிவுத்துறை திருநெல்வேலி மண்டலம், பாளையங்கோட்டை பதிவு மாவட்டம், எட்டயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிகின்ற திரு.விக்னேஷ் அவர்கள், தனக்கு படி அளக்கின்ற மற்றும் வேண்டிய ஆவண எழுத்தர்கள் மூலம் பதிவுக்கு வருகின்ற ஆவணங்களை மாத்திரம் எந்தவித கூராய்வும் செய்யாமல் தாராள மனதுடன் பதிவு செய்து கொடுத்து வருவதாகவும், அதே போன்று எட்டயபுரம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு ஆவணங்களை பதிவு செய்ய நேரடியாகவோ அல்லது தெரியாத ஆவண எழுத்தர்கள் மூலமோ பதிவுக்கு வருகின்ற பொதுமக்களிடம் சம்பந்தப்பட்ட சொத்தில் தாவா இருக்கிறது என்று சொல்லியும் சிறு சிறு குறைகளை கூட பெரியதாக எடுத்து சொல்லி பத்திரப்பதிவை தடுத்து நிறுத்துவதும் – தாமதப்படுத்துவதும் அதன் மூலமாக சட்டவிரோதமாக ஆதாயம் பெற்றுக் கொண்டு இருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் மனம் குமுறுகின்றனர்.
இதனால் பொதுமக்கள் பலருக்கும் பல்வேறு விதமான கால நேர வீண் செலவுகள் மற்றும் பண விரையங்களையும், மன உளைச்சல்களையும், மிகுந்த சிரமங்களையும் இவர் கொடுத்துக் கொண்டு வருவதுடன் பதிவுத்துறையின் மாண்பினையும் கெடுத்துக் கொண்டு வருவதாகவும்,
இவர் ஏற்கனவே சிவகாசி மற்றும் காரியாபட்டி சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றும்போது பொதுமக்களிடம் பெருமளவில் கையூட்டு பெற்றதின் விளைவாகவும் அவர்களின் புகாரின் பேரிலும் விஜிலென்ஸ் மூலமாக நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு எட்டயபுரம் சார்பதிவு அலுவலகத்திற்கு பணி மாற்றம் செய்து கடந்த மூன்றரை ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.
இவர் கடந்த 07. 05. 2025 தேதியில் சட்டவிரோதமான ஆதாய பணத்தை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டியில் இருக்கும் தனது வீட்டிற்கு செல்லும் பொழுது வழியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இவரை வழி மறித்ததின் காரணமாக அவர்களிடம் அகப்படாமல் தனது இருசக்கர வாகனத்தை சாலையிலேயே போட்டுவிட்டு அருகில் இருக்கும் காட்டுக்குள் ஓடி தலைமறைவாகியுள்ளார். இதனால் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் இவர் சார்பதிவு
அலுவலகத்திற்கு மூன்று நாட்கள் வராமல் தலைமறைவாக இருந்து உள்ளதாகவும் தகவல் தெரிய வருகிறது.
தற்பொழுது சமூக ஆர்வலர்கள் என்கிற பெயரிலும் வழக்கறிஞர் என்கிற போர்வையிலும் செயல்படுகின்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஒரு சில வழக்கறிஞர்களுடன் இவர் கூட்டு சேர்ந்து கொண்டு, பதிவுக்கு தாக்கலாகும் தனக்கு ஆதாயம் இல்லாத சொத்துக்களின் மீது தனக்கு வேண்டிய வழக்கறிஞர்களை வைத்து வேண்டுமென்று உண்மைக்கு புறம்பாக பொய்யான தாவா நோட்டீஸ் கொடுக்க வைத்து அதன்மூலம் சாமானியர்களின் பத்திரப் பதிவினை தாமதமாக்கியும், தடை செய்தும் பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவதுடன், இதன் மூலம் பலவேறு விதமான களங்கத்தையும், அவபெயர்களையும் பதிவுத்துறைக்கு ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
தொடர்ந்து இவரின் செயலால் பாதிக்கப்படும் பொதுமக்கள் இவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து கூனி குறுகி கெஞ்சி கூத்தாடி வெட்கத்தை விட்டு அழுது புலம்பி நிலைமையை எடுத்துக் கூறி உதவி கேட்டால், இவரின் ஆசி பெற்ற கூட்டாளிகளான வில்லகத்துக்குரிய வழக்கறிஞரை சந்திக்கச் சொல்லி அவர்கள் மூலம் உரிய பணம் செட்டில்மெண்ட் ஆனவுடன், தாவா மனுவை முடித்து வைத்து அதே ஆவணத்தை இவர் பதிவு செய்து கொடுக்கும் பணியும் அரங்கேறி வருகிறதாம்.
எனவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அவர்கள் இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, இவரால் பாதிக்கப்படுகின்ற பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பதிவு அலுவலகத்தில் நம்பிக்கையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பதிவுத்துறையின் சேவையை பெறுவதற்கு தாங்கள் உரிய வழிவகை செய்ய வேண்டும் எனவும், இதுபோன்று செயல்படக்கூடிய ஒரு சில சார்பதிவாளருக்கு இவர் மீது தாங்கள் எடுக்கும் துறை ரீதியான நடவடிக்கை முன்னுதாரணமாக அமைய வேண்டும் எனவும், பொதுமக்கள் பதிவு துறையின் மீது நம்பிக்கை கொள்ளும் வகையில் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவுத்துறை தலைவருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.