மின்சாரத் துறை அமைச்சருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்
மின்சாரத் துறை அமைச்சருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்.
தமிழகத்தில் புதிதாக வீடுகளை கட்டுவதற்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்கின்ற பொதுமக்களுக்கு காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் தங்கு தடை இன்றி மின் மீட்டரை வழங்க வேண்டுமென அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் மாண்புமிகு V.செந்தில்பாலாஜி அவர்களுக்கு, தமிழகத்தில் புதிதாக வீடு கட்டும் பொதுமக்கள் நலன் கருதி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் டாக்டர் ஆ.ஹென்றி எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்தில் இருக்கின்ற பெருநகரங்களின் புறநகர் பகுதிகளில் அதிகளவில் பொதுமக்களும், கட்டுனர்களும் மனைகளை வாங்கி ஆர்வமாக புதிதாக வீடுகளை கட்டும் பணியை மேற்கொள்கின்றனர். அப்படிப்பட்ட பொதுமக்கள் வீடுகளை கட்டுவதற்காக மின் இணைப்பு கோரி (1A) விண்ணப்பித்து 60 நாட்கள் கடந்தும், சம்பந்தப்பட்ட மின் அலுவலகத்தில் போதிய அளவில் மின் மீட்டர் இல்லாததால் மின் இணைப்பு பெற இயலவில்லை.
உதாரணத்திற்கு கூடுவாஞ்சேரி மின் அலுவலகத்தில் திரு.வஞ்சிரம் என்பவர் பெயரில் கடந்த 27.03.2023 அன்று விண்ணப்ப எண். 2000956803231164 ஆக விண்ணப்பித்துள்ளார். இதுவரை மின் இணைப்பு பெறாததால் உரிய நேரத்தில் வீடு கட்ட இயலவில்லை.
மேலும் இதனால் வீடு கட்ட வங்கிகளில் கடன் பெற்ற பொதுமக்களும், வாடிக்கையாளர்களுக்கு வீடுகளை முன்பதிவு செய்த கட்டுனர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர்.
ஆகவே மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் மேற்கண்ட புதிதாக வீடு கட்டும் பணியை மேற்கொள்கின்ற கட்டுனர்கள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருதி, மேற்கண்ட பிரச்சினையை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, கனிவுடன் பரிசீலித்து மின் மீட்டர் பற்றாக்குறையை போக்கி, புதிதாக வீடுகளை கட்டுகின்ற பொதுமக்களுக்கும் கட்டுனர்களுக்கும் போதிய அளவிற்கு தங்கு தடை ஏதும் இன்றி மின்சாரத் துறை சார்பில் மின் மீட்டரை விநியோகித்தோ அல்லது நுகர்வோர் தரப்பில் மின் மீட்டரை வெளிச்சந்தையில் இருந்து வாங்கி பொருத்திக் கொள்ளும் வகையில் அனுமதித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்