தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டியதால் இருபதுக்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புன்னம்பாக்கம் பகுதியில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சுற்றிலும் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்து அடர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அங்கு உள்ள மரத்தில் ராட்சத தேன்கூட்டில் கல் எறிந்துள்ளனர்.
இதனால் ராட்சத தேனீக்கள் சுமார் மூன்றுக்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள மக்களை துரத்தி துரத்தி கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. மூன்றுக்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள பெரியவர்கள் சிறியவர்கள் என ராட்சத தேனீக்களை கண்டு அலறி அடித்து ஓடும் சிசிடிவி காட்சிகளும் பதிவாகியுள்ளது. தேனீக்கள் கொட்டியதில் இருபதுக்கும் மேற்பட்டவர்களை 108 அவசர ஆம்புலன்ஸ் உதவியோடு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள ராட்சத தேன் கூட்டை கலைத்து தேனீக்களை விரட்டி வருகின்றனர். மேலும் தற்போது 3 க்கும் மேற்பட்ட தெருக்களில் ராட்சத தேனீக்கள் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரையும் துரத்தி கொட்டும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.