பூண்டி மாதா சிலையின் கண்ணாடி கூண்டை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் :

Loading

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம்  பூண்டி கிராமத்தில் 50 சதவீத இந்து மக்களும் 50 சதவீத கிறித்தவ மக்களும் வாழ்ந்து வருகின்றனர்,  இதனிடையே பூண்டி பேருந்து நிலையத்தில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு 6 அடி  பூண்டி மாதா சிலை கிறிஸ்தவர்களால் நிறுவப்பட்டது.  இந்த மாதா சிலைக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 5 வது வாரம் மாதா தேர் திருவிழா வெகு விமர்சையாக நடந்து வந்துள்ளது.மேலும் கிறிஸ்தவ மக்களுக்கு இணையான இந்து மக்களும் தாங்கள் வேண்டியது நிறைவேறும் வண்ணமாக மாதா சிலைக்கு புடவை அணிவித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வந்துள்ளனர்.  இந்நிலையில் இன்று காலை வந்து பார்த்த போது மாதா சிலைக்கு அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி கூண்டு சுக்குநூறாக உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து பொது மக்கள் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா மற்றும் போலீசார் நேரில் ஆய்வு செய்தனர். சிலைக்கு கீழே மது பாட்டில்கள் சிதறி கிடந்தன. மது அருந்தியவர்கள் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்யப் போவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.  கடந்த 2021-ல் மாதா சிலையின் தலை மர்ம நபர்களால் துண்டிக்கப்பட்டது. அதனால் அந்த கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கண்ணாடி கூண்டை உடைத்தவர்களை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *