ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் அதிகரிப்பு.. தமிழக அரசு உத்தரவு!
மக்களுக்கு குட் நியூஸ்.. ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் அதிகரிப்பு.. தமிழக அரசு உத்தரவு!
சென்னை: நாடு முழுவதும் வருகிற 4-ம் தேதி தீபவாளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் மக்கள் தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் தீபவாளிக்கு மக்கள் புது துணிமணிகள், பொருட்கள் வாங்க குவிந்து வருவதால் கடைத்தெருக்கள் களைகட்டியுள்ளன. சென்னை, மதுரை, நெல்லை என முக்கிய நகரங்களில் தீபாவளி பர்சேஸ் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை ரேசன் கடைகளின் வேலை நேரம் இரவு 7 மணி வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நியாயவிலைக் கடைகளை திறந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க அரசு உத்திரவிட்டுள்ளது.
அதன்படி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகப் பொருட்களை வாங்க விரும்பும் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகள் அனைத்தும் நவம்பர் 1, 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக பொருட்களை வாங்க இயலாதவர்கள் வழக்கம் போல் பண்டிகை முடிந்த பிறகு நவம்பர் 7-ஆம் தேதி முதல் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.