திருவள்ளுர் மாவட்ட அரசு கேபிள் டிவி தொடர்பான புகார்களை பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கலாம் : கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் ஜூலை 04 : தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம், கேபிள் டிவி சேவையை தனியார் நிறுவனங்களை விட குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. இதில் பொதுமக்களுக்கு செட்டாப் பாக்ஸ்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மாதாந்திர சந்தா ரூ.140 என்ற வீதத்தில் (18 சதவீத ஜி.எஸ்.டி நீங்கலாக) பொதுமக்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு கேபிள் டிவி சேவை எந்த விதத்திலும் தடைப்படாமல் நடைபெறும். தனியார் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள், பொதுமக்களுக்கு அரசு கேபிள் டிவி சிக்னல்களும் அரசு செட்டாப் பாக்ஸ்களும் கிடைக்காது என்று தவறான தகவல்களை கூறியும், தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை, அரசு செட்டாப் பாக்ஸ் என்று தவறான தகவல்களை கூறியும் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகவும் புகார்கள் வருகின்றது.
அதனால் பொதுமக்கள் அரசு செட்டாப்பாக்ஸ்களுக்கு பதிலாக தனியார் நிறுவனங்களின் செட்டாப் பாக்ஸ்களை தவறான தகவல்களை நம்பி வாங்க வேண்டாம். அரசு செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தாத பகுதிகளில் விருப்பமுள்ள புதிய நபர்களுக்கு கேபிள் ஆபரேட்டர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு செட்டாப் பாக்ஸ்களை வழங்க மறுக்கும் கேபிள் ஆபரேட்டரின் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்.
பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், திருவள்ளுர் மாவட்ட அரசு கேபிள் டிவி தொடர்பான புகார்களை தொலைபேசி எண்-044–27665551 ல் தெரிவிக்கலாம் என திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.