திருவள்ளூரில் பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை :
திருவள்ளூர் ஏப் 26 : திருவள்ளூர் மாவட்ட தலைநகரிலிருந்து காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களுக்கும் திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் நகரின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் போதுமான பேருந்துகளை நிறுத்த வசதியில்லாததாலும்,போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் வேடங்கிநல்லூர் என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் அந்த இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. தற்போது பேருந்து நிலையம் அமைப்பதற்கான அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சூழ்நிலையில் பேருந்து நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. காவல்துறையினர் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் அந்த அறிவிப்பு பலகையை அங்கு அமைத்தனர்.
ஏற்கனவே அந்த இடத்தை ஆக்கிரமித்ததோடு மட்டுமல்லாமல் அதனை விற்பனை செய்ததாகவும் கூறப்படும் நிலையில் அந்த இடத்தில் அறிவிப்பு பலகை வைத்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.