ஒதுக்கப்பட்ட நிலங்களை வழங்க ஆட்சியரிடம் மனு
![]()
பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை வழங்கக் கோரி தலித் விடுதலை இயக்கம் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு**
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், மாத்தூர் கிராமத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு நிலமில்லாத பட்டியலின மக்களுக்கு சுமார் 250 ஏக்கர் நிலம் வழங்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 30 ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு இன்னும் நிலம் வழங்கப்படவில்லை என்றும், ஆக்கிரமிப்பில் உள்ள அந்நிலங்களை மீட்டு உரிய பயனாளிகளுக்கு வழங்கக் கோரியும் தலித் விடுதலை இயக்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ச.கருப்பையா ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அம்மனுவில், “ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் 1956-களில் உருவாக்கப்பட்ட ‘கிராம நிலகுடியேற்ற கூட்டுறவு சங்கங்கள்’ மூலம் பட்டியலின மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பெரும்பாலான பகுதிகள் தகுதியான பயனாளிகளுக்குச் செல்லாமல் பிற நபர்களின் ஆக்கிரமிப்பிலும் பயன்பாட்டிலும் உள்ளன. குறிப்பாக கோபி, அந்தியூர் வட்டங்களில் அருந்ததியர், பறையர் இன மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களும், நில குடியேற்ற சங்க நிலங்களும் பிற சமூகத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு, தகுதியான பட்டியலின மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மாத்தூர் கிராமத்தில் 250 ஏக்கர் இலவச நிலம் வழங்க பல்வேறு அரசு ஆணைகளும், நில நிர்வாக ஆணையரின் கடிதங்களும் உள்ள போதிலும், கடந்த 30 ஆண்டுகளாக அந்நிலங்கள் மக்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதி காப்பு காடுகள் மற்றும் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நில ஒப்படை வழங்க இயலாது என மாவட்ட நிர்வாகக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 18.09.1971-ஆம் ஆண்டு அரசாணை (G.O.Ms.No.2621)-ன் படி வனத்துறையிடம் இருந்து வருவாய்த்துறையினரால் மீட்கப்பட்ட சுமார் 1500 ஏக்கர் நிலங்கள் இதுவரை எந்த பயனாளிகளுக்கும் வழங்கப்படாமல் உள்ளது.
எனவே, மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரடியாக தலையிட்டு, 30 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட நிலமில்லாத பயனாளிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு சிறப்பு அரசாணை இயற்றி, நிலங்களை வழங்கிட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தலித் விடுதலை இயக்கம் சார்பாக கேட்டுக்கொண்டனர்.

