ராணிப்பேட்டை DTCP அலுவலகத்தில் ஒப்புகைச் சீட்டு வழங்க கோரிக்கை
![]()
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட நகர் ஊரமைப்பு இயக்கக (DTCP) அலுவலகத்தில், “Call for Particulars” (விவரம் கோரும் கடிதங்கள்) தொடர்பாக பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் சமர்ப்பிக்கும் ஆவணங்களுக்கு முறையான ஒப்புகைச் சீட்டு (Acknowledgement) வழங்கப்படவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் ஆ. ஹென்றி அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
“DTCP அலுவலகங்களில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் போது ஒப்புகைச் சீட்டு வழங்கப்படாததால், பொதுமக்கள் தங்களின் கோப்புகளின் நிலையை அறிய முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது நிர்வாகத் தெளிவின்மைக்கும் தேவையற்ற தாமதங்களுக்கும் வழிவகுக்கிறது.
அரசு அலுவலகங்களில் பெறப்படும் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் மற்றும் ஆவணங்களுக்கும் உரிய ஒப்புகை வழங்குவது ஒரு அடிப்படை நிர்வாக நடைமுறையாகும். இதை பின்பற்றுவது நல்லாட்சிக்கும் வெளிப்படைத்தன்மைக்கும் அவசியமானது.
எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தைத் தொடங்கி அனைத்து DTCP அலுவலகங்களிலும், “Call for Particulars” ஆவணங்கள் பெறப்படும் போது விண்ணப்பதாரர்களுக்கு கட்டாயமாக ஒப்புகைச் சீட்டு வழங்கும் நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்த பிரச்சினை தொடர்பாக பல பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முனைவோர்கள் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தொடர்ந்து முறையிட்டு வருவதாகவும், இதற்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கோரிக்கை தொடர்பாக நகர் ஊரமைப்பு இயக்குனருக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

