இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்..கடிதத்தில் இருந்த பரபரப்பு தகவல்!
என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை. என் கணவனோ அல்லது அவரின் குடும்பமோ காரணம் அல்ல. நான் சுயமாக முடிவெடுத்தது என இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாறாவிளையை சேர்ந்தன் இளம்பெண் ஜெமலா மேரி , இனயம் சின்னத்துறையை சேர்ந்த வாலிபர் நிதின் ராஜ்என்பவரும் காதலித்து வந்தனர்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் ஜெமலா மேரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், காதல் ஜோடி திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி திருமணம் நடந்தது.
இதனை தொடர்ந்து பெண் வீட்டார் சார்பில் மேல்மிடாலம் கூண்டுவாஞ்சேரியில் புதிய வீடு கட்டி கொடுக்கப்பட்டு அந்த வீட்டில் ஜெமலா மேரியும், நிதின் ராஜும் குடும்பம் நடத்தி வந்தனர். நிதின் ராஜ் சரியான வேலை இல்லாமல், வெளிநாடு செல்வதாக கூறி வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே சிறு சிறு குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ஜெமலா மேரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இளம் பெண்ணின் பெற்றோருக்கு நிதின்ராஜின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே ஜெமலா மேரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர்.
பிறகு உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே ஜெமலா மேரியின் வீட்டை போலீசார் சோதனையிட்ட போது, அவர் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்த கடிதம் சிக்கியது. அதில், நான் சுய நினைவுடன் எழுதுவது. என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை. என் கணவனோ அல்லது அவரின் குடும்பமோ காரணம் அல்ல. நான் சுயமாக முடிவெடுத்தது.என்னை யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை என எழுதப்பட்டிருந்தது. இது மட்டுமின்றி அவரது உள்ளாடையில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் எழுதப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.