ரீல்ஸ் வீடியோ பார்ப்பதில் மூழ்கி இருந்த மனைவி..கணவன் செய்த அதிர்ச்சி செயல்!
கர்நாடகாவில் ரீல்ஸ் மோகத்தில் மூழ்கிய மனைவியை, வெறிச்செயலில் கணவனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் ஹிலியானா கிராமத்தைச் சேர்ந்தவர் பெயிண்டர் கணேஷ் புஜாரி, பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றி வரும் இவரது மனைவி ரேகா,வேலை நேரத்தை தவிர எஞ்சிய நேரத்தில் ரீல்ஸ் பார்ப்பதையே வாடிக்கையாக இருந்துள்ளார். இதனால், எப்போதும் செல்போனும் கையுமாக இருந்ததாக கூறப்படுகிறது. ரேகா ரீல்ஸ் வீடியோ பார்ப்பதில் மூழ்கி இருந்ததால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கணவன் வீட்டுக்கு வந்தது கூட தெரியாமல் ரேகா, தொடர்ந்து ரீல்ஸ் வீடியோவை பார்த்து பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார். அதைக் கண்டதும் கணேஷின் கண்கள் சிவந்தன.
ஆத்திரத்தில் மனைவியை திட்டியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறியதும் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, ரேகாவின் கழுத்தில் கணேஷ் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கணேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.