பக்ரீத் பெருநாள் மக்கள் நலப் பேரவை தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி வாழ்த்து
பக்ரீத் பெருநாள்டாக்டர் ஆ.ஹென்றி வாழ்த்து
உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு தியாக திருநாளாம் பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்களை அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் – தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தெரிவித்து வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
மேலும் ஆ.ஹென்றி வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியில்..
பொதுவாக பண்டிகை என்றாலே பெரியோர் முதல் குழந்தைகள் வரை அனைவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பண்டிகையை கொண்டாடும் வகையில் புத்தாடை அணிந்து, மனம் கவர்ந்த கமகமக்கும் வாசனை திரவியங்கள் பூசி, ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் பெருநாள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டு, இறைவனை மனம் உருக பிரார்த்தித்து, ஒருவருக்கொருவர் கட்டி தழுவி வாழ்த்துக்களை பரிமாறி, உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள் என மதங்களைக் கடந்து அனைவரும் ஒன்று கூடி அன்பை பரிமாறி, முஸ்லிம்கள் பண்டிகை என்றாலே அனைவரின் எதிர்பார்ப்பான பிரியாணியை அனைவருக்கும் வழங்கி, ஏழை எளியோருக்கு தான தர்மங்கள் செய்து மனநிறைவுடன் கொண்டாடுவதாகும்.அனைத்து மதங்களிலும் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு காரணங்கள் உண்டு. அதுபோல பக்ரீத் பெருநாள் கொண்டாடபடுவதற்கான காரணம் மற்றும் சிறப்புகளை குறித்து இந்நன்னாளில் எனக்குத் தெரிந்தவைகளை தங்களுடன் பகிர்வது ஆகச் சிறப்பாகயிருக்கும் என எண்ணுகிறேன்.
புனித துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு என்னவென்றால் இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் செய்வது மற்றும் பக்ரீத் பெருநாள்.முதலில் நாம் புனித ஹஜ் குறித்துப் பார்ப்போம். நல்ல உடல் ஆரோக்கியமும் மற்றும் பொருளாதார வசதி கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் வாழ் நாளின் ஒரு முறையேனும் ஹஜ் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சவுதி அரேபியா நாட்டிலுள்ள மெக்கா நகரை நோக்கி புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். புனித பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் அர்ப்பணிப்பதாக கருதப்படுகிறது. புனித ஹஜ் கடமையை செய்யும் ஆண்கள் வெள்ளை நிறத்திலான தையல் இல்லாத ஆடையை அணிந்தும், பெண்கள் வழக்கமாக அணியும் உடலை முழுமையாக மறைக்கும் வகையிலான புர்கா போன்ற ஆடைகளை அணிந்து புனித நகரமான மெக்காவில் ஐந்து அல்லது ஆறு நாட்கள் தங்கி இறைவனின் புனித இல்லமான காபத்துல்லாவை 7 முறை சுற்றி வந்து தவாப் செய்து, ஹஜ் செய்வதற்கான நடைமுறைகளை முறையாக கடைபிடித்து தங்களது ஹஜ் கடமையை பூர்த்தி செய்வார்கள்.
புனித ஹஜ் கடமையை பூர்த்தி செய்பவர்களின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு அன்று பிறந்த பாலகர்கள் போல் புனிதமானவர்களாக ஆவர்கள் என்று கூறப்படுகிறது.அதேசமயம் ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு செய்யும் பாவச் செயல்களை பாதிக்கப்பட்ட மனிதன் மன்னிக்காத வரை இறைவன் அவரை மன்னிப்பதில்லை. அவர் ஹஜ் கடமையை நிறைவேற்றினாலும் சம்பந்தப்பட்ட மனிதன் பாவ மன்னிப்பு கொடுக்காத வரை அவரது பாவங்கள் மன்னிக்கப்படாது.எனவே இதனை கவனத்தில் கொண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற பயணம் மேற்கொள்பவர்கள் தங்களின் பயணத்திற்கு முன்பு தங்கள் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார் என அனைவரிடமும் சென்று நாங்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளப் போவதாகவும் எங்களுக்கு வேண்டி பிரார்த்தனை செய்யுமாறும், மேலும் நாங்கள் உங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ வார்த்தை மற்றும் செயலால் தங்களுக்கு துரோகம் செய்திருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் என பாவமன்னிப்பு கேட்பார்கள்.
பக்ரீத் பெருநாளின் சிறப்பு குர்பானி கொடுப்பதாகும். குர்பானி கொடுப்பதற்கு முக்கிய காரணம் இறைத்தூதர் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் இறைவனுக்காக செய்த தியாகச் செயலை நினைவு கூறும் வகையில் குர்பானி கொடுக்கப்படுகிறது. நம் சொந்த வாழ்க்கையில் பக்தி, கீழ்ப்படிதல் மற்றும் சமர்ப்பணத்தை ஊக்குவிக்க அவரது செயலை நாம் பயன்படுத்துகின்றோம்.
இறைத்தூதர் நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் முதுமை காலத்தில் அவர்களுக்கு ஒரு ஆண்மகன் பிறக்கிறார். அக்குழந்தைக்கு இஸ்மாயில் (அலை) என்று பெயர் சூட்டி தங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக வளர்த்து வருகிறார்கள். இந்நிலையில் ஒரு நாள் இரவில் இஸ்மாயில் (அலை) அவர்களை பலி கொடுக்குமாறு இப்ராஹிம் (அலை) அவர்களின் கனவில் இறைவன் கட்டளையிடுகிறான். அவர் முதலில் இது சைத்தானின் செயல் என்றெண்ணி தவிர்த்தார். ஆனால் அவர் மீண்டும், மீண்டும் அதே கனவினை காண தொடங்கினார். எனவே இது இறைவனின் கட்டளையென அதனை ஏற்று பலி கொடுக்க தனது மகன் இஸ்மாயில்(அலை) அழைத்துச் சென்றபோது ஷைத்தான் அதை தடுப்பதற்காக பல வழிகளில் முயற்சித்தும், இப்ராஹிம்(அலை) அவர்கள் இறை வாக்கை நிறைவேற்றும் வகையில் மகனை பலியிட முயன்ற போது இறைவன் இப்ராஹிம் ( அலை) இறை பக்தியை மெச்சி பலி பீடத்திலிருந்து இஸ்மாயில் (அலை) அவர்களை அகற்றி காத்து ஒரு ஆட்டினை பலியாக்கினார்.இதனை நினைவு கூறும் விதமாக உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் அவரவர் வசதிக்கேற்ப குர்பானியாக ஆடு, மாடு அல்லது ஒட்டகம் போன்ற விலங்குகளை கொடுக்கின்றார்கள். மேலும் பலர் கூட்டுக் குர்பானியாகவும் கொடுக்கின்றார்கள். குர்பானி கொடுக்கப்பட்ட விலங்கின் இறைச்சி மூன்று பங்காக பிரிக்கப்பட்டு ஒரு பங்கு ஏழை எளியவர்களுக்கு மற்றொரு பங்கு உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்களுக்கு மீதமுள்ள ஒரு பங்கினை தங்கள் பயன்பாட்டிற்கு வைத்து கொள்வார்கள். இப்படி உலகெங்கும் கொடுக்கப்படும் குர்பானி இறைச்சிகள் வறுமையில் வாடும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்
இத்தகைய சிறப்புகளைக் கொண்ட பக்ரீத் பெருநாளை இறைவன் வகுத்த வழிமுறைகளை பின்பற்றி அனைவரும் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்வோமென அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.