ராணுவத்திற்கு ஆதரவு.. மு.க.ஸ்டாலின் நாளை பேரணி!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்தும் சென்னையில் நாளை பேரணி நடைபெற உள்ளது.
பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து போர்நினைவு சின்னம் வரை நாளை மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெறுகிறது.
இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்காக நாளை பேரணி நடைபெறுகிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்த பேரணியில் பங்கேற்று, நமது ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம். முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.