நடுரோட்டில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர்!

Loading

பாதிக்கப்பட்ட இளம்பெண் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து ஒரு தனியார் டி.வி.யில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

பெங்களூருவை சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த மாதம் 30-ந் தேதி இரவு நடந்து சென்றபோது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் அத்துமீறியுள்ளார். இதையடுத்து அந்த நபரிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் கடுமையாக போராடினார். அப்போது சாலையில் நடந்து சென்ற மக்கள், வாகனத்தில் சென்றவர்களிடம் உதவி கேட்டும் யாரும் அந்த இளம்பெண்ணுக்கு உதவி செய்ய முன் வரவில்லை. இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்து உள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து ஒரு தனியார் டி.வி.யில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அது பற்றிய விவரம் வருமாறு,

பெங்களூருவில் போக்குவரத்து நிறைந்த ஐ.டி. பூங்கா பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள ஈகோவேர்டில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் திடீரென எனது முதுகில் தட்டினார். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. யாரோ ஒருவர் பொறுப்பற்ற முறையில் சென்றதால் தன்மீது அவரது கை மோதியிருக்கும் என்று கருதினேன். ஆனாலும் மீண்டும் அதேபோல் என் முதுகில் தட்டினார். இதையடுத்து யாரோ ஒருவர் வேண்டும் என்றே இதுபோல் செய்கிறார் என்று தெரியவந்தது. இதையடுத்து நான் உதவி கேட்டு கத்தினேன். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை.

என் முதுகில் தட்ட மர்ம நபர் 3-வது முறையாகவும் யூடர்ன் எடுத்து என்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்தேன். இதையடுத்து நான் உதவிக்காக மீண்டும் கத்தினேன். அப்போது நிறைய பேர் அங்கு இருந்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த பகுதியில் நான் பொதுமக்களிடம் உதவி கேட்டேன். மேலும் அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர்களை நிறுத்தி உதவி கேட்டேன். ஆனால் எனக்கு உதவ யாரும் முன்வரவில்லை. இந்த சம்பவத்திற்கு பின்பு நான் அவசர அவசரமாக ஈகோவேர்டில் உள்ள பாதுகாப்பு அறைக்கு சென்றேன். அங்கு எனக்கு உதவி கிடைத்தது.

பின்னர் மறுநாள் போலீசில் புகார் செய்தேன். இதையடுத்து போலீசார் அந்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு பிறகு தான் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், இதுபோன்ற சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது எனக்கு தெரியும். இவ்வளவு கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் கொண்ட பகுதியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது என்பது மிகவும் ஆச்சரியமான விசயமாக கருதுகிறேன் என்றார். இந்த சம்பவம் தற்போது பெங்களூருல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0Shares