அ.தி.மு.க.வை அச்சுறுத்தி அடக்கி விட்டது பா.ஜ.க.. மு.க.ஸ்டாலின் பேச்சு!
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது. கூட்டத்துக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. பொதுச் செய லாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா.
அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கூட்டத்துக்கு வந்து இருந்தனர்.
கூட்டத்தில் ஜூன் மாதம் 1-ந்தேதி மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 1,244 இடங்களில் தி.மு.க. பொதுக்கூட்டங்கள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டதில் 26 சுற்றுலா பயணிகள் பலியானதற்கும், போப் பிரான்சிஸ் மறைவுக்கும் இரங்கல் தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* தடங்கல்கள் என்பது எப்போதும் இருக்கும், அதை உங்கள் உழைப்பால் வெல்லுங்கள், இதுவே எனது வேண்டுகோள்.
* நமது கட்டமைப்பை காலந்தோறும் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
* நம்முடைய பலமே நம்முடைய கட்சியின் கட்டுமானம் தான், இத்தகைய நிர்வாக கட்டமைப்பு எந்த கட்சிக்கும் கிடையாது.
* அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைவிடவும் மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாகச் செல்ல வேண்டும்.
* பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கே சிக்கல் வரும். இதனால் பா.ஜ.க. கூட்டணிக்கு எடப்பாடி ஒத்துக்கொண்டுள்ளார்.
* அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அ.தி.மு.க.வை அடக்கி விட்டது பா.ஜ.க.
* தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது பா.ஜ.க., அவர்களின் அடக்குமுறைக்கு எடப்பாடி பழனிசாமி பணிந்து விட்டார் என்றார்.