த.வெ.க ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மோதல்.. ரயில் பயணிகள், பொதுமக்கள் முகம் சுளிப்பு!
திருவள்ளூரில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி த.வெ.க சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய வஃக்பு வாரிய சட்டத்தினை ஆளும் ஒன்றிய பாஜக அரசு கடுமையான எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றியது.இதனை அடுத்து தமிழ்நாட்டில் திமுக பல்வேறு கட்டமாக தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் புதிய வஃக்பு வாரிய சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆணையிட்டார்.
அவரது ஆணைக்கிணங்க திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மத்திய அரசு நிறைறவேற்றியுள்ள வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்தும் அதை திரும்பப் பெற வேண்டும். மேலும் முஸ்லிம்கள் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசை வன்மையாக கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருவள்ளூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் செயலாளர் குட்டி என்கிற பிரகாசம் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் குட்டி என்கிற பிரகாசம் தலைமையில் 200 க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து ரயில் நிலையம் அருகே கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதில் இதில், வழக்குரைஞர் ராஜா, எஸ்.எஸ்.கலை, வெற்றி உள்ளிட்ட அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று முடிந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பிரகாசம் என்கிற குட்டியுடன் நிர்வாகிகள் போட்டோ எடுத்துக் கொண்டனர்.அப்போது பூந்தமல்லி ஒன்றிய நிர்வாகிகள் போட்டோ எடுக்கும் போது திருவள்ளூர் ஒன்றியத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இதில் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும், பூந்தமல்லி கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் அருகில் இருந்த நிர்வாகிகள் இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.இதனால் திருவள்ளூர்ஆர்ப்பாட்டம் நடைபெற்ற சில நிமிடங்களில் போர்க்களமாக மாறியது.
அப்போது திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் ரயில் நிலையத்தை விட்டு இறங்கி வந்து கொண்டிருந்த நிலையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சாலையின் நடுவே அடித்து கொண்ட சம்பவம் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.