சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்பு..மத்திய அரசு அதிரடி!

Loading

வேலை என கூறி மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் வேலை எனக்கூறி இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.மேலும் இவ்வாறான சைபர் குற்றங்களில் ஈடுபட மறுப்பவர்கள் வேலை அளிப்போரால் மின்சாரம் பாய்ச்சியும், பணய கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன என தகவல் வெளியாகின. அதனை தொடர்ந்து இவ்வாறு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபட சிக்க வைக்கப்பட்டுள்ளவர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்தவகையில் மியான்மருக்கு வேலை என கூறி அழைத்து செல்லப்பட்டு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மியான்மர் – தாய்லாந்து எல்லையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கால் சென்டரில் சைபர் குற்றங்களில் ஈடுபட வேலைக்கு அமர்த்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என முதல்கட்ட தகவலில் மத்திய அரசு தெரிவித்துள்ளது . மேலும் மீட்கப்பட்ட அனைவரும் தாய்லாந்து நாட்டின் மயொ சட் நகருக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை என அழைப்புகள் வந்தால் அது தொடர்பாக முழுமையாக விசாரித்துவிட்டு செல்லுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

0Shares