ரஷியாவுக்கு ஆதரவளித்த அமெரிக்கா..ஐ.நா. வாக்கெடுப்பில் திடீர் திருப்பம்..உக்ரைன் என்ன செய்யப்போகிறது?
ரஷியா மற்றும் உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. பொதுச் சபையில் நடந்த வாக்கெடுப்பில் ரஷியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா வாக்களித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷியா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரவும், அமைதியான முறையில் தீர்வு காணவும் ஐ.நா. பொதுச் சபை தீர்மானம் கொண்டு வந்து நேற்று வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் ரஷியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா வாக்களித்தது பேசும் பொருளாகியுள்ளது.
முந்தைய அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அரசு உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருந்தது. மேலும், ரஷியாவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வந்தது. இந்த நிலையில், அமெரிக்காவில் சமீபத்திய ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அந்நாட்டில் அமைந்துள்ள டிரம்ப் தலைமையிலான புதிய அரசு ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருக்கிறது என்பதை உலக நாடுகள் உற்றுநோக்குகிறது.
மேலும் 193 உறுப்பினர்களை கொண்டுள்ள ஐ.நா. பொதுச் சபை உக்ரைன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் தாக்கல் செய்த “விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை மேம்படுத்துதல்” என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. மேலும் இந்த தீர்மானத்திற்கு மொத்தம் 93 ஆதரவு வாக்குகளும், 18 எதிரான வாக்குகளும் பதிவாகின என்பது கூடுதல் தகவல். மேலும் இதில் 65 பேர் வாக்களிக்கவில்லை.
ஐ.நா. பொதுச் சபை வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்க வேண்டாம் என்ற நிலைப்பாடு கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.