தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் வாழ்த்து|FAIRA
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் உலகம் முழுதும் உள்ள தமிழர்களால் மகிழ்வுடன் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்துக்களையும் பொங்கல் கொண்டாடப்படுவதின் வரலாற்றையும் குறித்து ஃபெயிரா தலைவர் ஆ.ஹென்றி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்..
பொங்கல் திருநாளானது போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
அதில் முதலாவதாக கொண்டாடப்படும் போகி பண்டிகையின் நோக்கமானது நம் இல்லங்களில் தேங்கியிருந்த பழைய பொருட்களை எல்லாம் ஒன்று திரட்டி வீதிகளில் நடுவே நள்ளிரவில் தீயிலிட்டு கொளுத்தி நம் இல்லங்களை தூய்மைப்படுத்தி புதியனவைகளை வரவேற்பது போல, ஒவ்வொரு மனிதனின் உள்ளங்களில் இருக்கும் தீய பழக்கங்கள், தீய எண்ணங்கள் மற்றும் உறவுகளிடம் நட்புகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கிடும் வகையில் ருத்ர கீதை ஞான யக்ஞம் என அழைக்கப்படும் அக்னி குண்டத்தில் எறிந்து நம் உள்ளங்களையும் எண்ணங்களையும் தூய்மைப்படுத்தி கொள்ளும் நன்னாளாக போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகையன்று சிறுவர்கள் மேளம் அடித்து மகிழ்வுடன் வீதிகளில் வலம் வருவார்கள்.
போகி பண்டிகை கொண்டாடி நம் இல்லம் மற்றும் உள்ளங்களில் புதிய பொலிவும் உற்சாகமும் பொங்க அடுத்த நாள் நாம் கொண்டாடும் பண்டிகையானது பொங்கல் பண்டிகையாகும். திருநாளானது தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக கொண்டாடப்படுகிறது. இப் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதின் நோக்கமானது ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். மேலும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புத்தாடை அணிந்து வீட்டின் முன் விதவிதமான வண்ணக் கோலங்களிட்டு, புதிய மண் பானையில் பால், அரிசி, மஞ்சள் வெள்ளம், நெய் உள்ளிட்டவற்றைக் கொண்டு சமைக்கும் பொழுது,
பொங்கி வரும் பொங்கலை போல் நம் உள்ளங்களிலும் உற்சாகமும் மகிழ்ச்சியும் பொங்க பொங்கலோ பொங்கல் என்று மங்கள ஒலி எழுப்பி குலவையிட்டு வழிபடுவார்கள். சூரியனுக்கும் மாட்டுக்கும் பொங்கல் படைத்து அண்டை வீட்டாருக்கும் நட்புகளுக்கும் கொடுத்து மகிழும் விழாவே பொங்கல் மற்றும் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது.பொங்கல் பண்டிகையின் போது கரும்பு பிரதானமாக விளங்குகிறது.
மேலும் பொங்கலின் சிறப்பம்சமாக ஜாதி மதம் இனம் என அனைத்தையும் கடந்து நாம் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மேலும் பொங்கல் பண்டிகையானது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மகர சங்கராந்தி என ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பீகார், மகாராஷ்டிரா, கோவா, நேபாளம், ஜம்மு போன்ற மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. புஷ் சங்கராந்தி என மேற்கு வங்கம், வங்கதேசம் போன்ற இடங்களில் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை மற்றுமொரு முக்கியமாக நிகழ்வாக வீரத்தின் விளை நிலமாம் தமிழ் மண்ணில், தமிழர்களின் வீரத்தின் அடையாளங்களில் ஒன்றான உலக புகழ் பெற்ற ஏறுதழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுவது வழக்கம். தடைகளை உடைத்து, ஆக்ரோஷத்துடன் சீறி பாய்ந்து வரும் காளைகளை, தினவெடுத்த தோள்களும், முறுக்கேறிய புஜங்களும், உள்ளத்தில் உறுதியும், வீரமும் கொண்ட இளைஞர்களின் கூட்டமானது சீறி வரும் காளைகளை இறுக தழுவி அடக்கி வெற்றி காண்பதே ஏறு தழுவுதல் ஆகும். இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்படுகின்றன. மேலும் இந்தப் போட்டியில் அதிக காளைகளை அடக்குபவர்களுக்கு முறையே முதலாவது இரண்டாவது மற்றும் மூன்றாவது என சிறப்பு பரிசுகளாக கார், பைக் மற்றும் தங்க நகைகள் என வழங்கப்படுகின்றன. அதுபோல் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்களின் நோக்கமானது கிடைக்க போகும் பரிசுகளுக்காக அல்ல, அவர்கள் தம் வீரத்தினை வெளிப்படுத்துவதற்காக மட்டும்தான்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டாலும் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய மூன்று இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது மிகவும் பிரபலமானது. குறிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியானது உலக பிரசித்தி பெற்றது.
பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கொண்டாடப்படுவது மாட்டுப் பொங்கலாகும். இத் திருநாளில் உழவுக்கும் தொழிலுக்கும் உறுதுணையாக இருந்து மக்களின் வாழ்வுடன் ஒன்றிய கால்நடைகளான பசு, காளை மற்றும் கன்றுகளின் கொம்புகளில் வண்ணம் பூசி, அவற்றை அழகுர அலங்கரித்து பூஜித்து அவைகளுக்கு நன்றி செலுத்தும் நாளாம் மாட்டுப்பொங்கல் நன்னாள்.
பொங்கல் விழாவின் நிறைவாக காணும் பொங்கல் மற்றும் கன்னிப் பொங்கல் என்றும் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் நன்னாளில் உறவுகளும் நட்புகளும் குடும்பத்தினருடன் கடற்கரை மற்றும் பொழுதுபோக்கு தலங்களிலும் ஒன்று கூடி மனம் விட்டு பேசி மகிழ்ந்து, விளையாடி, பலகாரங்களை பகிர்ந்துண்டு அன்றைய பொழுதை மகிழ்வுடன் கழிக்கும் நன்னாளாகும்.
இத்தகைய சிறப்புகள் கொண்ட பொங்கல் திருநாளில் கவலைகளை மறந்து, உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க, இனி வாழ்வில் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன், அனைவரும் அனைத்தையும் பெற்று வாழ்வில் உயர்ந்திட இறைவனை வேண்டி வழிபட்டு, ஒன்று கூடி கொண்டாடி மகிழ்வோம் பொங்கல் பண்டிகையினை என ஃபெயிரா தலைவர் ஆ.ஹென்றி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.