ஈரோடு கூட்டுறவுவங்கி ஊழியர்கள்13அம்ச கோரிக்கை

Loading

ஈரோட்டில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆட்சியரிடம் மனு அளிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க மற்றும் நகர் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநில தழுவிய அளவில் பேரணி நடத்தப்பட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது. ஈரோட்டில் நடைபெற்ற இந்த மாபெரும் கோரிக்கை பேரணிக்கு மாவட்டத்தலைவர் S.M.மேசப்பன் தலைமை தாங்கினார். மாவட்டச்செயலாளர் K.மாரிமுத்து முன்னிலை வகித்தார். பேரணியின் நிறைவில், மாவட்ட ஆட்சியர் வாயிலாக தமிழக முதலமைச்சருக்கு அனுப்பும் வகையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர்கள் M.மதியழகன், P.செந்தில்குமார், மாவட்ட இணைச்செயலாளர்கள் G.முத்துகிருஷ்ணன், R.வசந்தகுமார், ஒன்றிய நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள், நியாயவிலைக்கடை பணியாளர்கள், நகை மதிப்பீட்டாளர்கள், கணினி பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பூசப்பன், மாவட்டச்செயலாளர் முஜிபுல்லா உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கமிட்டனர். நியாயவிலைக் கடைகள் மூலம் செயல்படுத்தப்படும் தாயுமானவர் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைந்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதில் நடமாட இயலாத முதியோர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளை மட்டுமே சேர்க்க வேண்டும் என்றும், வசதி படைத்தோர் மற்றும் 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்வோர் ஆகியோரை இத்திட்டத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், பயனாளி குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களிடம் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதிப்பதோடு, கைரேகை மற்றும் கருவிழி சரிபார்ப்பு முறையை ரத்து செய்து பாக்கெட் முறையில் விநியோகம் செய்ய வேண்டும் எனவும், ஏற்றி இறக்கும் கூலி மற்றும் வண்டி வாடகைத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. கடந்த 01.04.2023 முதல் புதிய ஊதியம் அனுமதிக்கப்பட்ட நிலையில், விதிக்கப்பட்ட நிபந்தனைகளால் 40 சதவீத பணியாளர்கள் புதிய ஊதியம் பெற இயலாத நிலை உள்ளதால் அந்நிபந்தனைகளை முழுமையாகத் தளர்த்தி புதிய ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பணியாளர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே அனைத்து நிதிப் பலன்களையும் வழங்கிட வேண்டும், 2021-ம் ஆண்டுக்குப் பின்னர் பணி ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், கருணைத்தொகையை ₹1,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஓய்வூதிய சலுகை கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. இரண்டாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கணினி பணியாளர்களைச் சிறப்புத் தேர்வுகள் மூலம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தகுதியுள்ள நகை மதிப்பீட்டாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், மாவட்ட அளவில் பணிமூப்புப் பட்டியல் தயாரித்து பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. வெளி மாவட்டங்களில் பணிபுரிவோருக்குச் சொந்த மாவட்டத்திற்கு இடமாறுதல் வழங்க வேண்டும், பணிக்கொடையை ₹25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், செயலாளர்களைக் கட்டாயப்படுத்தி பயிர்க்கடன் வழங்கச் சொல்லி மன உளைச்சலுக்கு ஆளாக்குவதையும், வாய்மொழி உத்தரவுகளை அமல்படுத்தத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்துவதையும் கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், வரும் 03.08.2026 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சங்க நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.
0Shares