தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு சு.முத்துசாமி அவர்களுக்குபெயிரா தலைவர் கடிதம்.
வீட்டுவசதி துறை அமைச்சருக்கு பெயிரா தலைவர் கடிதம்.
தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு சு.முத்துசாமி அவர்களுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், பொதுமக்களின் நலன் கருதி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் வீட்டுமனை பிரிவுகளுக்கு DTCP அனுமதி வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் ஏற்கனவே நகர் ஊரமைப்பு இயக்குனரகத்தின் (DCR) அபிவிருத்தி மற்றும் கட்டுப்பாடு விதிகளின்படி தமிழகம் முழுவதும் DTCP அனுமதி பெற்றுள்ள வீட்டுமனை பிரிவில் விண்ணப்பதாரர்களால் விற்பனை செய்யும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ள சமுதாயக்கூடம், பள்ளி, மருத்துவமனை, சுகாதார நிலையம் உள்ளிட்ட ஒதுக்கீடுகளை, அது குறித்த தன்மை அறியாமல், சந்தை மதிப்பை விட குறைவான விலைக்கு கிடைக்கிறது என்கிற அடிப்படையில், மேற்கண்ட ஒதுக்கீடுகளை வீட்டுமனை அபிவிருத்தியாளர்களிடமிருந்து, அப்பாவி பொதுமக்கள் வாங்கி வைத்துள்ளனர்.
குறிப்பாக இந்த வீட்டுமனை பிரிவுகளில் திறந்தவெளி நிலம் 5% முதல் 10% வரை தான் ஒதுக்கப்பட்டு இருக்கும்.
இதனை வாங்கி வைத்துள்ள பொதுமக்கள் தற்போது குடியிருப்பு மனையாக நில வகைப்பாடு மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் போது, தற்போதுள்ள (DTCP) நகர் ஊரமைப்புச் சட்டத்தின் புதிய விதிகளின்படி, ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள திறந்தவெளி நிலம் போக, தற்பொழுது உள்ள புதிய விதிகளின் படி தேவையான அளவிற்கு திறந்தவெளி நிலம் ஒதுக்க வேண்டுமென வலியுறுத்துவதோடு, அப்படி தேவையான திறந்தவெளி நிலம் ஒதுக்கவில்லை எனில், அப்பாவி பொதுமக்களின் நில வகைப்பாடு மாற்றம் கோரிய விண்ணப்பத்தினை நகர் ஊரமைப்பு துறையினர் நிராகரிக்கின்றனர்.
அப்படி மேற்படி ஒதுக்கீடுகளுக்கு DTCP புதிய விதிகளின்படி தேவையான திறந்தவெளி நிலத்தை ஒதுக்க வேண்டும் எனில், அப்பாவி பொதுமக்கள் வாங்கி வைத்துள்ள மொத்த நிலத்தையும் உள்ளாட்சிக்கு எழுதிக் கொடுத்து, மொத்த நிலத்தையும் இழக்க நேரிடும்.
ஆகவே பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் அவர்கள், இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, DTCP பழைய விதிகளின்படி அனுமதி பெற்ற மேற்படி ஒதுக்கீடுகளை, நில வகைப்பாடு மாற்றம் செய்து தரக் கோரி விண்ணப்பித்தால், தற்போதுள்ள DTCP புதிய விதிகளின்படி திறந்தவெளி நிலத்தை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தாமல், ஏற்கனவே DTCP அனுமதி பெற்றுள்ள மனைப் பிரிவில் உள்ளதை உள்ளபடியே பாவித்து, நில வகைப்பாட்டினை மட்டும் மாற்றம் செய்வதற்கு தேவையான கட்டணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு, நில பயன்பாடு வகைப்பாட்டினை மாற்றம் செய்து கொள்ளும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என, மேற்கண்ட வகையில் வகைப்பாடுள்ள ஒதுக்கீடு நிலங்களை வாங்கி வைத்துள்ள அப்பாவி பொதுமக்களின் சார்பாக பெயிரா தலைவர் டாக்டர்.ஹென்றி அவர்கள் வீட்டுவசதி துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.