பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு கடந்த ஒன்பதாண்டுகளில், நாட்டின் விளையாட்டுத்துறை சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டிருப்பதாகவும், கட்டமைப்புகளை உலகத்தரத்திற்கு மேம்படுத்த முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார்.தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழாவில் பேசிய அனுராக் சிங் தாக்கூர், கேலோ இந்தியா விளையாட்டுகளின் மூலம், கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு வீரர்களின் திறமைகள் கண்டுபிடிக்கப்பட்டு, மாநில அளவில் சாதனை படைத்தவர்கள் தற்போது தேசிய அளவில் சாதனை படைத்துள்ளதாகவும், தெரிவித்தார்.தமிழ்நாடு ஆளுநரும் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான திரு ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் சார்பு வேந்தர் திரு. உதயநிதி ஸ்டாலின் விழாவினை சிறப்பித்தார்.விழாவில் பேசிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், பட்டம் பெறும் இந்த நாள் தங்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் உச்சத்தைக் குறிக்கிறது. படிக்கும் காலத்தில் நீங்கள் பெற்றிருக்கும் திறன்களைப் பற்றியும் செய்திருக்கும் சாதனைகள் பற்றியும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது என்றார்.நீங்கள் வாழும் சமூகத்தில் முழுமையான மனிதராக ஏற்கப்படுவதற்கும் உங்களின் ஆற்றலைத் தருவதற்கான முறையான அங்கீகாரமாகவும் இது இருக்கிறது. இன்றைய உலகில் விளையாட்டும் சமூகமும் ஒரு சிக்கலான ஆனால் ஆற்றல்மிக்க உறவைக் கொண்டுள்ளன. கலாச்சாரம், அடையாளம் மற்றும் சமூக உறவுகளை வடிவமைக்கும் ஆற்றல் விளையாட்டுக்கு உண்டு. அதே நேரத்தில், தனிநபர் விளையாட்டு மற்றும் குழு விளையாட்டுகள் பரந்துபட்ட சமூகப் போக்குகளாலும் சிக்கல்களாலும் பாதிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டார்.அனுராக் சிங் தாக்கூர், விளையாட்டு சமூகத்துடன் இணைய முக்கிய வழிகளில் ஒன்று, அவை கலாச்சார விழுமியங்கள் மற்றும் விதிமுறைகளை பிரதிபலிப்பதோடு அவற்றை வலுப்படுத்துகின்றன. உடல் சார்ந்த சுறுசுறுப்பான செயல்களில் பங்கேற்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் குழுப்பணி, ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகளை வளர்க்கவும் உதவும் என்றார்.தனிநபர் போட்டிகள் மற்றும் குழு அளவிலான போட்டிகள் நம் வாழ்வில் உள்ள தடைகளைக் கடக்க பல பாடங்களைக் கற்றுத் தருகின்றன. வெற்றி தோல்வி என்பது முக்கியமல்ல அதேசமயம் விளையாட்டு மூலம் வளர்க்கப்படும் திறன்கள் தனிமனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் எதிர்கொள்ள உதவும் என்றார்.தற்போதைய சூழ்நிலையில் நமது இந்திய விளையாட்டு வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட விளையாட்டு வசதிகளுக்கான கட்டமைப்புகள் அதோடு தொடர்ச்சியான ஆதரவு காரணமாக இது சாத்தியமாகியிருக்கிறது என்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சிறப்புத் திட்டங்களின் மூலம் வழங்கப்படும் ரொக்கப்பரிசுகள், ஊக்கத்தொகைகள், வேலைவாய்ப்புகள் மற்றும் நிதியுதவி ஆகியவை நமது நாட்டின் விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் போட்டிகள், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப் போன்ற முக்கிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிக்கின்றன என்றும் தெரிவித்தார்.எனவே, சர்வதேச விளையாட்டு அரங்கில் முன்னேறுவதற்கு நம்மை முன்னிலைப்படுத்த இதுவே சரியான தருணம் என்றார்.அன்புள்ள பட்டதாரிகளே, உங்கள் விழுமியங்களுக்கு உண்மையாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களிடம் கருணையுடன் இருங்கள். உங்கள் கனவுகளை நனவாக்குவதில் உறுதியோடு இருங்கள் என்றும் அமைச்சர் கூறினார்.2019-2020, 2020-2021, 2021-2022 ஆகிய கல்வியாண்டுகளில் பட்டப்படிப்பை முடித்த சுமார் 7,700 மேற்பட்டோருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.