ஈரோடு வெற்றி: அறிவாலயத்தில் கொண்டாட்டம் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அச்சாரம் முதல்வர் ஸ்டாலின் உற்சாக பேட்டி

Loading

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்  வெற்றி நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு அச்சாரமாக அமைந்திருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல் சுற்றிலிருந்து கடைசி 15 வது சுற்று வரை காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் முன்னணியில் இருந்தார், இதைத்தொடர்ந்து காலை முதலே திமுகவினர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலயத்தில் குவிந்தனர், காங்கிரஸ் வெற்றியை கொண்டாடும் வகையில் ஆண்களும் பெண்களுமாக அறிவாலயம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தோடு காணப்பட்டது, பட்டாசு வெடித்து திமுகவினர் வெற்றியை மகிழ்ச்சியோடு கொண்டாடினர், இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர், இதைத்தொடர்ந்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அறிவாலயத்திற்கு வந்தார். அவரை உற்சாக முழக்கமிட்டு அறிவாலயத்தில் திமுகவினர் வரவேற்றனர் இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் . இளங்கோவன்க்கு மிகப்பெரிய, மகத்தான, வரலாற்றில் பதிவாகக்கூடிய வகையில் ஒரு மாபெரும் வெற்றியை தேடித் தந்திருக்கக்கூடிய அந்தத் தொகுதியினுடைய வாக்காளர் பெருமக்களுக்கு தி மு க சார்பில் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை நான் முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது நான் தொடர்ந்து சொல்லி வந்தது, திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை தொடர்ந்து எடுத்து வைத்தேன். திராவிட மாடல் ஆட்சியை இன்னும் சிறப்போடு நடத்திட வேண்டும் என்று மக்கள் இந்த மிகப்பெரிய ஆதரவை இந்த இடைத்தேர்தலில் வழங்கியிருக்கிறார்கள்.எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய  எடப்பாடி பழனிசாமி  இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரைக்கும் தன்னையே மறந்து ஒரு நாலாந்தர பேச்சாளரைப்போல் பேசிய பேச்சுக்கு, இந்த இடைத்தேர்தல் மூலமாக அந்தத் தொகுதியில் இருக்கக்கூடிய மக்கள் ஒரு நல்ல பாடத்தை வழங்கியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, இருபது மாத கால தி மு கழகத்தினுடைய இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் ஒரு அங்கீகாரம் தர வேண்டும். இந்தத் தேர்தலை இடைத்தேர்தலாக மட்டுமல்லாமல், இந்த ஆட்சியை எடைபோட்டு பார்க்கக்கூடிய தேர்தலாக பாருங்கள் என்று நான் தொடர்ந்து பிரசாரத்தில் எடுத்துச் சொன்னேன்.ஆகவே, மக்கள் ஒரு நல்ல எடைபோட்டு இந்த ஆட்சிக்கு மேலும் வலுசேர்க்கின்ற வகையில் ஒரு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்கள். விரைவில் நாம் சந்திக்கவிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு அச்சாரமாக இந்த இடைத்தேர்தல் அமைந்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரியது. அந்தத் தொகுதி மக்கள் அத்தனை பேருக்கும் நான் இந்த நேரத்தில் மீண்டும் ஒருமுறை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பிலும், திமு க சார்பிலும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த வெற்றிக்காக தொடர்ந்து அயராது பாடுபட்ட, பணியாற்றிய  அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், மாவட்ட கழகத்தினுடைய செயலாளர்கள், கழகத்தினுடைய செயல்வீரர்கள், அதேபோல், கூட்டணியில் இடம் பெற்றிருக்கக்கூடிய தோழமைக் கட்சியைச் சார்ந்திருக்கக்கூடிய தலைவர்கள், தோழர்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.கேள்வி : இந்த முடிவு 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தொடக்கமாக பார்க்கலாமா? அல்லது கடந்த 20 மாத ஆட்சி காலத்திற்கான மதிப்பெண்ணாக பார்க்கலாமா? முதலமைச்சர்  : ஏற்கனவே, இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை, எடைத்தேர்தலாக பாருங்கள் என்று நான் சொன்னேன், இந்த இடைத்தேர்தலில் நல்ல மதிப்பெண்களை வழங்கியிருக்கிறார்கள். வர இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில், இதைவிட மிகப்பெரிய வெற்றியை நிச்சயமாக வழங்குவார்கள்.கேள்வி: தேசிய அரசியலுக்கு நீங்கள் வரவேண்டுமென்று ஃபரூக் அப்துல்லா போன்ற தலைவர்கள் எல்லாம் வலியுறுத்தி இருக்கிறார்கள், எப்படி பார்க்கிறீர்கள். முதலமைச்சர் : நான் ஏற்கனவே தேசிய அரசியலில் தான் இருக்கிறேன், அதில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த கோரிக்கையின் அடிப்படையில்தான் நானும் நேற்று கூட்டத்திலும் பேசியிருக்கிறேன். அந்த பேச்சிலேயே எல்லாம் அடங்கியிருக்கிறது.கேள்வி: 2024 நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் வேட்பாளரை ஒன்றிணைக்கும் பணியில் நீங்கள் ஈடுபடுவீர்களா முதலமைச்சர்  நான் திரும்ப, திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன், நேற்று கூட பேசினேன். யார் வெற்றி பெற்று, யார் பிரதமராக வரவேண்டும் என்பதை விட, யார் பிரதமராக இருக்கக்கூடாது, யார் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதுதான் இப்போதைக்கு எங்களுடைய கொள்கை.இவ்வாறு அவர் கூறினார்,

 

 

0Shares

Leave a Reply