முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் :
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் மற்றும் சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்திட அச்சிறுமியின் பெற்றோர்களிடத்தில் போதிய வசதியில்லாத காரணத்தினால்,மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.இதுகுறித்து முதலமைச்சர் அறிந்தவுடன், சிறுமி டேனியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் 29.8.2022 அன்று சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியவை சந்தித்து நலம் விசாரித்தார்.அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.2.2023) இரண்டாவது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, அச்சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டும் என்றும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி, தொடர் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.சிறுமி டானியாவின் தாய் சௌபாக்கியம், தனது இல்லத்திற்கு நேரில் வந்து மகளை நலம் விசாரித்து, தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று தெரிவித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.இந்நிகழ்வின் போது உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் உடனிருந்தனர்.