கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களுக்கு பாராட்டு…
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின் படி கந்தர்வகோட்டை ஒன்றியம் வட்டார வளமையத்தில் நடைபெற்ற இல்லம் தேடிக் கல்வி மைய உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு )கு.பிரகாஷ் தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் முன்னிலை வகித்தார்.சென்னை புத்தகக் திருவிழாவில் கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தின் சார்பில் கலந்து கொண்ட இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர் மாரியம்மாள் கற்பித்தல் உபகரணங்களை காட்சி படுத்தி சிறப்பாக செயல்பட்டதற்கு பொன்னாடை போர்த்தி வட்டார வளமையத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது . மேலும் தன்னார்வலர் மாரியம்மாள் பேசும்போது சென்னை புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகளை இல்லம் தேடி கல்வித் திட்டத்தால் கிடைத்தது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்ட ஐந்தாம் கட்ட பயிற்சியில் தமிழ், ஆங்கிலம் ,கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம் வாசிப்பு பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும், கணித பாடத்திற்கு அடிப்படை திறன்களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளை மாணவர்களுக்கு எளிதாக கற்பிக்க வேண்டும் எனவும்,அறிவியல் பாடங்களை மாணவர்களுக்கு எளிதாக புரியும் படி சோதனைகள் மூலம் விளக்க வேண்டும் எனவும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தன்னார்வலர்கள் தினமும் மாணவர் வருகை பதிவை இல்லம் தேடி கல்வி செயலில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், மாதந்தோறும் நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பெற்றோர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் இல்லம் தேடி கல்வி மையத்தில் நடைபெறும் கற்பித்தல் முறைகளை கலந்துரையாட வேண்டும் எனவும் பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது. இப்பயிற்சியில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ்குமார், ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா கருத்தாளராக செயல்பட்டு பயிற்சியை வழங்கினார்கள்.