இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன: மக்களவையில் பெட்ரோலியத்துறை இணையமைச்சர் தகவல்
புதுதில்லி, ஜூலை 19, 2021
இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக
மக்களவையில் பெட்ரோலியத்துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி
கூறினார்.
மக்களவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத்துறை இணையமைச்சர் திரு
ராமேஸ்வர் தெலி எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
இயற்கை எரிவாயு மற்றும் குழாய் மூலம் அனுப்பப்படும் இயற்கை எரிவாயு
பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதற்காக சிட்டி கேஸ் விநியோகம்(சிஜிடி) உருவாக்கப்பட்டு குழாய் மூலம் இயற்கை
எரிவாயு வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும், அழுத்தப்பட்ட இயற்கை
எரிவாயுவாக(சிஎன்ஜி) வாகனங்களுக்கும் விநியோகிக்கப்படுகின்றன.
சிஜிடி நெட்வொர்க்கை வளர்க்க, நிறுவனங்களுக்கு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை
எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம்(பிஎன்ஜிஆர்பி) அங்கீகாரத்தை வழங்கும்
அதிகாரத்தை பெற்றுள்ளது. 27 மாநிலங்களில் 407 மாவட்டங்கள் சிஜிடி
நெட்வொர்க்கை உருவாக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
அதி வேக டீசலுடன், பயோ டீசலையும் கலந்து விற்பதற்கான வழிகாட்டுதல்களை
பெட்ரோலியத்துறை அமைச்சகம் கடந்த 2019 ஏப்ரல் 30ம் தேதி வெளியிட்ட
அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.
எத்தனால் ஆலைகள் அமைக்க மத்திய அரசு ஊக்குவிப்பு:
மத்திய அரசிடமிருந்து முறையான அனுமதியின்றி நாட்டின் எந்த பகுதியிலும்
எத்தனால் ஆலைகளை தொழில்முனைவோர்கள் அமைக்கலாம். இருப்பினும், இதற்கு
மாநிலங்கள், சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் மற்றும் பருநிலை மாற்றம்,
சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சட்டரீதியான அனுமதி பெற வேண்டும். இத்திட்டத்தை
பொது விநியோகத்துறை ஆண்டுக்கு 6 சதவீத வட்டி மானியம் அல்லது வங்கிகள்
வசூலிக்கும் வட்டியில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அதை, ஒராண்டு
தாமதத்துடன், 5 ஆண்டுகளுக்கு அமல்படுத்துகிறது.
நாட்டின் எந்த பகுதியிலும் எத்தனால் ஆலைகளை மத்திய அரசு அமைக்கவில்லை.
ஆனால் இவற்றை ஏற்படுத்த மத்திய அரசு ஊக்குவிக்கிறது.
எத்தனால் கலப்பு அதிகரிப்பு:
பயோ எத்தனால் (E-100) மாதிரி திட்டங்கள் புனேவில், பொதுத்துறை எண்ணெய்
நிறுவனங்களால் கடந்த ஜூன் 5ம் தேதி தொடங்கப்பட்டது.
2030ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீத எத்தனாலை கலப்பதற்கான தேசிய
கொள்கை-2018 வழங்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டிலிருந்து எத்தனால் கலப்பு சராசரி
அதிகரிக்கப்பட்டு வருகிறது. 2013-14 எத்தனால் விநி்யோக ஆண்டில் (ESY)
எத்தனால் கலப்பு சராசரி 1.53 சதவீதமாக இருந்தது. இது 2020-21 எத்தனால்
விநி்யோக ஆண்டில் (ESY) ஜூலை 12ம் தேதி நிலவரப்படி 7.93 சதவீதமாக
அதிகரிக்கப்பட்டுள்ளது.