மூத்த பத்திரிகையாளரின் முகநூல் பதிவால், கர்ப்பிணி பெண்ணுக்கு இலவசமாக பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனை
கோவை மேட்டுப்பாளையம் அருகே பரளிக்காடு பழங்குடியின கிராமத்தை சேர்ந்த மீனா என்ற சமூக சேவகர் தனது பிரசவத்திற்கு மருத்துவ உதவி கிடைக்காமல் தவித்து வந்தார். இதையறிந்த அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்க மாநில துணைச் செயலாளரும் அன்பு அறக்கட்டளையின் நிறுவனருமான கொ.அன்புகுமார்
சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்யும்படி தனது முகநூலில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள சுபம் மருத்துவமனையின் உரிமையாளர் மகேசுவரன், பத்திரிகையாளர் அன்புகுமாரை தொடர்புகொண்டு, மீனாவுக்கு தனது மருத்துவமனையிலேயே இலவசமாக பிரசவம் பார்த்து தருவதாக உறுதியளித்தார். அதன்படி மீனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கிறது.
உதவி கிடைத்த பால்ராஜ் மீனா தம்பதியினர், மருத்துவர் மகேசுவரனுக்கும் மூத்த பத்திரிகையாளர் அன்புகுமாருக்கும் நன்றி தெரிவித்தனர்.
முகநூல் பொழுது போக்கு தளமாக மட்டுமல்லாமல் பலருக்கும் பயனுள்ள களமாகவும் இருப்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துரைப்பது குறிப்பிடத்தக்கது.