வெவ்வேறு சமூகம்: காதலுக்கு எதிர்ப்பு…காதலர்கள் எடுத்த விபரீத முடிவு!

Loading

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ஒன்றாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்தவர் மாரிசிவா . 20 வயதான இந்த வாலிபர் படிப்பை முடித்துவிட்டு பணகுடியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இதனிடையே அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், மாரி சிவாவுக்கும் சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர் . இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவர இதனை கண்டித்துள்ளனர் . அதுமட்டுமல்லாமல் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்த காதலர்கள் இருவரும் திடீரென மாயமாகினர் . இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். இதுகுறித்து பணகுடி போலீஸ் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார்.

இந்த நிலையில் மாயமான , 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. நேற்று காலையில் பணகுடி தெற்கு ரதவீதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் மாணவியும், மரியசிவாவும் ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு பிணங்களாக தொங்கினர். இதை பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து பணகுடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0Shares