உலகின் தலைசிறந்த தலைவர் திரு.நெல்சன் மண்டேலா அவர்கள் பிறந்ததினம்!.

Loading

தென்னாப்பிரிக்காவின் நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடி 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த போராட்ட வீரர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜூலை 18 ஆம் தேதியை ஐ.நா.சபை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக 2009ஆம் ஆண்டு அறிவித்தது.

அமைதிக்கும், மனித உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் நெல்சன் மண்டேலா ஆற்றிய பணியைக் கௌரவிக்க இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. இவர் 1918ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் குலு என்ற கிராமத்தில் பிறந்தார்.

இவர் சட்டம் பயின்ற பிறகு, கறுப்பின மக்கள் நலனைப் பாதுகாப்பதற்காக உருவான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் இணைந்து, அதன் தலைவரானார். இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப்போராட்டங்களையும் நடத்தி வந்தார்.

அதன்பின், 1961-ல் இந்த இயக்கத்தின் ஆயுதப்படைத் தலைவராக உருவெடுத்தார். இவர்மீது மனித உரிமை மீறல்கள் குற்றம் சாட்டப்பட்டு, 1962-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1964-ல் ஆயுள் தண்டனை (வயது 46) விதிக்கப்பட்டது.

மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம் என அரசின் நிபந்தனையை நிராகரித்தார். நாட்டின் புதிய அரசு இவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில் 1990-ம் ஆண்டு (வயது 71) விடுதலை செய்யப்பட்டார்.

தொடர்ந்து போராடி, இறுதியில் 1994-ல் நாடு விடுதலை அடைந்தது. தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார். நேரு சமாதான விருது, பாரத ரத்னா விருது (இந்தியர் அல்லாத ஒருவருக்கு இந்த விருது அப்போதுதான் முதன்முறையாக வழங்கப்பட்டது), அமைதிக்கான நோபல் பரிசு, மகாத்மா காந்தி சர்வதேச விருதும் வழங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள நெல்சன் மண்டேலா, 2013 டிசம்பர் 5 ஆம் தேதி அன்று 95-ம் வயதில் மறைந்தார்.

0Shares