சென்டாக் இறுதி கவுன்சிலிங் முடியும் வரை முதலாம் ஆண்டு வகுப்புகளை துவக்க கூடாது..திமுக வலியுறுத்தல்!
சென்டாக் இறுதி கவுன்சிலிங் முடியும் வரை முதலாம் ஆண்டு வகுப்புகளை துவக்காமல் இருக்க தனியார் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா. சிவா அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி கல்விக்கேந்திரமாக மாறி வருவதாக ஆளுநரும், முதல்வரும் கூறி வருகின்றனர். ஆனால் மாணவர் சேர்க்கை கூட ஆண்டுதோறும் தாமதமாகவும், குளறுபடிகளுடனும் துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் சென்டாக் மூலம் அரசு இட ஒதுக்கீட்டில் தேர்வாகும் மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்வதற்குள் கல்லூரிகளில் பாதிப்பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு விடுகிறது. இது அறியாமையாலையோ, இயலாமையாலையோ நடைபெறவில்லை திட்டமிட்டு தனியார் கல்லூரிகளில் கையூட்டு பெற்றுக் கொண்டு அங்கு மாணவர் சேர்க்கை முதலில் முடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே செய்யப்படுகிறது. இந்த சதித்திட்டம் கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, செவிலியர் கல்லூரி என வேறுபாடின்றி அனைத்திலும் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டுகூட தற்போது தனியார் கல்லூரிகள் அனைத்தும் நாங்கள் விரைவில் வகுப்புகளை தொடங்க உள்ளோம், உடனடியாக பணம் கட்டி சேர்ந்து கொள்ளுங்கள் என மாணவர்களையும், பெற்றோர்களையும் மிரட்டியும், வலியுறுத்தியும் வருகின்றன. ஆனால் இது எதுவும் தெரியாததுபோல் சென்டாக் நிர்வாகம் இருந்து வருகிறது.
மேலும் சென்டாக் கலந்தாய்வு முடிவதற்கு முன்பு தனியார் கல்லூரிகள் மேலாண்மை இடத்தில் சேர்ந்த மாணவர்களை கொண்டு முதலாம் ஆண்டுக்கான வகுப்புகளை தொடங்கிவிடுகின்றன. சென்டாக் மூலம் சேர்ந்த மாணவர்களுக்கு, அவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு முன்பு நடத்திய பாடத்தை கற்றுத்தருவதும் இல்லை. இதனால் சென்டாக் மூலம் தேர்வாகி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு பாடங்கள் புரியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் பல்கலைக்கழக தேர்வில் பிரகாசிக்க முடியவில்லை. இது வாழ்க்கை முழுக்க அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதுவும் ஒரு கல்வி தீண்டாமைதான். ஏனென்றால் பெரும்பாலும் சென்டாக் சேர்க்கையை நம்பியிருப்பவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள்தான். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை மேலே கொண்டுவருவதற்கான செயல்களை செய்வதுதான் கல்விக்கேந்திரத்திற்கான பாதை. அந்த பாதையில் செல்லாமல் ஆட்சியாளர்கள் தங்களின் சுயநலத்திற்காக தனியார் கல்லூரிகளுடன் இணைந்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை மீண்டும் ஒடுக்கி வைக்கிறது. இது எப்படி கல்விக் கேந்திரமாக மாற்றும் செயலாகும். எனவே அரசு சென்டாக் இறுதிக்கட்ட கவுன்சிலிங் முடியும் வரை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை துவக்கக்கூடாது என்று அனைத்து தனியார் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இதனை மீறும் கல்லூரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் உடனடியாக சென்டாக் கையேட்டை வெளியிட்டு மாணவர் சோ்க்கையை தொடங்க வேண்டும். வெளிமாநில மாணவர்கள் புதுச்சேரி மாணவர்களின் இடங்களை எந்த படிப்பிலும் பறிக்காமல் இருப்பதற்கும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுபோல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முழுவதையும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கே வழங்க வேண்டும். முதலில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், அடுத்து 2ம், 3ம், 4ம் வகுப்பு என கடைசி ஓராண்டான 12ம் வகுப்பு மட்டும் அரசுப்பள்ளியில் படித்த மாணவனாக இருந்தாலும் அந்த மாணவர்களை கொண்டே அரசு ஒதுக்கீட்டு இடங்கள் முழுமையும் நிரப்ப வேண்டும். காமராஜர் கல்வி உதவித்தொகையை மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும்போதே வழங்க வேண்டும்.
இவைகளை செய்யாமல் திட்டங்களை அறிவித்தே ஓட்டுக்களை வாங்கிவிடலாம் என நினைத்து செயல்படக்கூடாது. ஏனென்றால் தாமதமான சென்டாக் சேர்க்கை மற்றும் சென்டாக் நிதியுதவியால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது வாக்காளர்களாக மாறியுள்ளனர். அவர்கள் அரசின் தாமத சேர்க்கையால் பாதிப்பாடம் முடிந்து சென்று கல்வியில் பாதிக்கப்பட்டதுடன், தாமத சென்டாக் நிதியால் கடனாகி தாம் சம்பாதிப்பதை அக்கடனை அடைக்கவே செலவு செய்து வருகின்றோம் என்பதையும் உணர்ந்து உள்ளனர். எனவே அவர்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்பதையும் ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா. சிவா அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்..