அமெரிக்க அதிபரை கொல்ல சதி..ஈரான் மீது இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு குற்றச்சாட்டு!
ஈரான் அரசு தங்கள் அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தின் முதல் எதிரியாக அமெரிக்க அதிபரை கருதுவதாகவும், இதனால் டொனால்டு டிரம்ப்பை கொல்வதற்கு ஈரான் திட்டமிட்டுள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதத்தை உருவாக்க ஈரான் முயற்சித்து வருகிறது. இதனால் இஸ்ரேல் , ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, தற்போதைய நிலவரப்படி 15 அணு ஆயுதங்களை தயாரிக்கும் அளவிற்கு ஈரான் யுரேனியம் செறிவூட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் ஈரானின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. கடந்த வெள்ளிக்கிழமை ‘ஆபரேஷன் ரைசிங் லயன் மூலம் இஸ்ரேல் ராணுவம் ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் தாக்குதல் நடத்தியது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்தது. இதையடுத்து இஸ்ரேலுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையாக, இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ஈரான் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேலின் வான் எல்லை மூடப்பட்டுள்ளது.மேலும் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை கொல்வதற்கு ஈரான் திட்டமிட்டுள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;-“டொனால்டு டிரம்ப் ஒரு தீர்க்கமான தலைவர். ஈரான் அரசிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார். எனவே ஈரான் அரசு டிரம்ப்பை தனது முதல் எதிரியாக கருதுகிறது.
ஈரானின் அணு ஆயுத திட்டத்தை எதிர்ப்பதில் டிரம்பின் ‘இளைய கூட்டாளி’ போல் நான் இருக்கிறேன். எனவே ஈரான் என்னையும் குறிவைத்துள்ளது. இஸ்ரேல் தற்போது அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது. எனவே அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்தையும் செய்ய இஸ்ரேல் தயாராக உள்ளது.”இவ்வாறு நெதன்யாகு தெரிவித்துள்ளார்.