மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புக்கள் தானம்!
ஆண்டிப்பட்டி அருகே மூளைச் சாவு அடைந்த பெண்ணின் தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புக்கள் மதுரை, திருச்சி நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஆத்தங்கரைபட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி நிருவி (33). இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. இந்த நிலையில் நிருவியின் அம்மா காளியம்மாள் கடந்த ஆண்டு இறந்துள்ளார். தனது தாய் உயிரிழந்த சோகத்தால் நிருவிக்கு உயர் ரத்த அழுத்த கோளாறு ஏற்பட்டது. ரத்த அழுத்த பிரச்சனைக்கு கடமலைக்குண்டு கிராமத்தில் உள்ள மருத்துவமனையில் நிருவி கடந்த ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிருவிக்கு கடும் தலைவலி ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு நிருவியின் உடலை பரிசோதனை செய்த போது அவர் தலையில் ரத்தக்குழாய் உடைப்பு ஏற்பட்டு தலை முழுவதும் ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து நிருவியின் கணவர் மற்றும் குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதனையடுத்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட நிலையில் கோமாவில் இருந்த நிருவியை அறுவை சிகிச்சை கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நிருவியின் உடலில் இருந்து கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புக்கள் தனித்தனியே எடுக்கப்பட்டது.
இதில் கண்கள் மதுரையில் உள்ள கண் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் இரண்டும் திருச்சியில் செயல்படும் இரண்டு மருத்துவமனைகளுக்கும், கல்லீரல் மதுரையில் செயல்படும் ஒரு தனியார் மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ் மூலம் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது. கூலித் தொழிலாளியான நிருவி மூளை சாவு அடைந்த நிலையில் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர்கள் முன் வந்ததிற்கு மருத்துவர்களும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.