பாகிஸ்தானுக்கு சிந்துநதி நீர் வழங்கப்படாது..இந்தியா மீண்டும் உறுதி!

Loading

பாகிஸ்தான் நாடு பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது என மீண்டும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960-ம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளின் நீரை இரு நாடுகளுக்கும் பகிர்ந்தளிப்பதை நோக்கமாகக் கொண்டது.

இந்தநிலையில், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்து உள்ளது. மேலும் அந்த நாடு பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது என மீண்டும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஷ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும், மீண்டும் தொடராத வகையிலும் தனது ஆதரவை நிறுத்தும் வரை சிந்துநதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் நமது பிரதமர் கூறியது போல, ‘தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது’ என கூறினார். காஷ்மீர் தொடர்பான எந்த இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடப்பதானால், அது சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறுவது தொடர்பாக மட்டுமே பேசப்படும் என்றும் கூறினார்.

0Shares