உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகள்..மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

Loading

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட பகுதியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வட்டத்தை தேர்ந்தெடுத்து அந்த வட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முடிவுற்ற திட்ட பணிகள், நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் அதன் அடிப்படையில் இன்றைய தினம் பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட அலமாதி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு, மருந்தகம், வருகை பதிவேடு, மற்றும் பொதுமக்களிடம் சிகிச்சை தொடர்பான மருத்துவப் பணிகள் குறித்தும், தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை, உயரம் கற்றல் திறன் அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து ஆய்வு செய்தார்.

பாடியநல்லூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.3.76 கோடி மதிப்பீட்டில் 16 வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு வரும் கல்வியாண்டிற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நாராவாரி குப்பம் பேரூராட்சி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கடைகள் மற்றும் மேற்கூரைக்களுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்தும், புழல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விளாங்காடுபாக்கம் ஊராட்சி கோமதி அம்மன் தெருவில் ரூ.28.56 இலட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தார் சாலைகளின் தரம் குறித்தும், அதே ஊராட்சி வேளார் தெருவில் திட்டத்தில் ரூ.36.84 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆங்காடு ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வரும் பணிகளும், பழைய எருமை வெட்டிபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2024-25) 10 இலட்சம் மதிப்பீட்டில் பசுமை தமிழ்நாடு இயக்கம் நாற்றங்கால் பண்ணை அமைத்தல் பணிகளையும், நெற்குன்றம் ஊராட்சியில் மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட வீடுகள் புணரமைப்பு திட்டம் 2024-25 திட்டத்தில் வீடு கட்டும் பணிகளை பார்வையிட்டார்.

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடூர்காலனியில் ரூ.9.97 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், பொன்னேரி பாலாஜி நகரில் தோட்டக்கலை – மலை பயிர்கள் துறைகளில் சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் (2024 – 25) காளான் வளர்ப்பு குடில் அமைக்கப்பட்டிருப்பதை பார்வையிட்டு பயன்பாடுகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். நெடுஞ்சாலைத்துறை பொன்னேரியில் ரூ 65.26 கோடி மதிப்பீட்டில் கி.மீ 5/4-ல்புதுவாயல் – புலிக்காட்டு சாலை, பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை இரயில் நிலையங்களுக்கிடையே கடவு எண் 26 க்கு மாற்றாக இரயில் கி.மீ 35/5-7 ல் சாலை மேம்பாலம் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு வேளாண்மை துறை அலுவலர்களிடம் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.இதில் தனித்துணை ஆட்சியர் (சபாதி) பாலமுருகன், உதவி ஆணையர் கலால் கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, பேரூராட்சிகள், உதவி இயக்குநர் ஜெயக்குமார், உதவி செயற்பொறியாளர் சரவணன், பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares