கட்டணம் வசூல் செய்வதற்கு எதிர்ப்பு..சுங்கச்சாவடி குறுக்கே லாரிகளை விட்டு போராட்டம் நடத்தியதால் கடும் போக்குவரத்து பாதிப்பு!
பட்டறை பெரும்புதூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் லாரி உள்ளிட்ட வாகனங்களை அனுமதிக்க கோரி லாரி உரிமையாளர்கள் கனரக லாரிகளை சுங்கச்சாவடி குறுக்கே விட்டு போராட்டம் நடத்தியதால் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் அடுத்த பட்டரைப்பெரும்புதூரில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் பட்டரைப்பெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வாகன ஓட்டிகள் தினந்தோறும் திருத்தணி மற்றும் திருவள்ளூருக்கு வேலையின் காரணமாக சென்று வருகின்றனர்.
அவ்வாறு செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு இந்த சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வது கிடையாது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களுக்கும் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடியில் உள்ள நிர்வாகிகளை வற்புறுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பட்டரைப் பெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண வசூலிப்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் போலிஸ் டிஎஸ்பி தமிழரசி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் பட்டரைப்பெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட லாரிகள் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், சென்னை, பூந்தமல்லி போன்ற பகுதிகளுக்கு செல்ல பட்டரைப்பெருமந்தூர் சுங்கச்சாவடியை கடந்து செல்ல முயன்றனர். அப்போது அங்கு இருந்த சுங்கச்சாவடி நிர்வாகிகள் லாரிகளுக்கு கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
உள்ளூர் வாகனங்களுக்கு எதற்கு கட்டணம் வசூல் செய்கிறீர்கள் என லாரி டிரைவர்கள் பணம் தர மறுப்பு தெரிவித்தனர். மேலும் பணம் கொடுத்தால் மட்டுமே சுங்கச்சாவடியை கடக்க முடியும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் டோல்கேட் பகுதியில் ஒரு புறத்தில் தங்களது லாரிகளை நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மதியம் 2 மணி வரையிலும் எந்த முடிவும் எட்டப்படாததால், ஆத்திரமடைந்த லாரி டிரைவர்கள் சிலர் சுங்கச்சாவடி முன்பு தங்களது லாரிகளை குறுக்கே போட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் லாரி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் லாரி டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சுங்கச்சாவடி பகுதியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக லாரி டிரைவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அவர்களை அங்கிருந்து புறப்பட்டு செல்ல அனுமதித்தனர். இதன் காரணமாக சுங்கச்சாவடி பகுதியில் திருவள்ளூர் மற்றும் திருத்தணி சென்ற வாகன ஓட்டிகள் வாகன நெரிசலால் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.