இஸ்லாமிய பெருமக்களுக்கு பெயிரா புனித ரமலான் வாழ்த்து.
இஸ்லாமிய பெருமக்களுக்கு பெயிரா புனித ரமலான் வாழ்த்து.
இஸ்லாம் மார்க்கத்தினை கடைபிடித்து உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் பெருநாளாம் ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி அவர்கள் செய்தி வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்து செய்தியில்..
இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில், உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்து கடமைகள் அதாவது கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்கிற கடமைகளை கைக்கொள்கின்றனர்.குறிப்பாக இந்த ரமலான் மாதத்தில் தான் மூன்றாவது கடமையான நோன்பு மற்றும் நான்காவது கடமையான ஜகாத் கொடுப்பதாகும். மேலும் இறைமறையான திருக்குர்ஆன் அருளப்பட்ட லைலத்துல் கத்ர் எனும் சிறப்புமிக்க இரவும் வருவது இந்த மாதத்தில் தான்.மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளை குறித்து இத்தருணத்தில் விரிவாக பதிவு செய்வதை சிறப்பான தருணமாக நான் கருதுகிறேன்.இந்த ரமலான் மாதமானது இஸ்லாமியர்களின் சங்கை மிகு மாதமாகும். இறைவழிபாட்டில் தவறாமல் பங்கேற்று, திருக்குர்ஆனை அதிக அளவில் ஓதி மனனம் (சிந்தனை) செய்து, நன்மைகளை நாடி, தான தர்மங்கள் செய்து, இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரி வேண்டுவது இம்மாதத்தின் சிறப்பாகும்.மேலும் ரமலான் மாதத்தில் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்பட்டிருக்கும்.வழி கெடுக்கும் சைத்தான்களுக்கு விலங்கிடப் பட்டி ருக்கும். அதுபோல யுத்தங்கள் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் மாதமாகும். இம்மாதத்தில் குடும்பத்தினர், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுடன் நட்பை பேணி – உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் மாதம் என பல சிறப்புகளை பெற்றது இந்த புனித ரமலான் மாதம் ஆகும்.
குறிப்பாக நோன்பின் மாண்புகளும் சிறப்புகளும் என்னவென்றால்
அதிகாலை முதல் அந்தி சாயும் வரை உண்ணாமல், பருகாமல் இறைவனுக்காக உண்ணா நோன்பு இருந்து, பசியினை உணர்ந்து, இறைவனை அதிகம் வழிபட்டு, இறைமறை திருக்குர்ஆனை அதிகம் ஓதி, வீண் பேச்சு, சண்டை, கோபம்,புறம் மற்றும் பொய் பேசுதல், பாலியல் உறவுகளை தவிர்த்து, நற்காரியங்கள் புரிந்து அந்தி சாயும் பொழுது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் சேர்ந்து பள்ளிகள் மற்றும் இல்லங்களில் நோன்பினை திறக்கின்றனர். மருத்துவ ரீதியாக நோன்பு வைப்பது சிறந்தது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.இதில் குறிப்பாக நோன்பு காலங்களில் அதிகாலை உண்ணும் உணவினை ஸஹர் உணவு என்றும் நோன்பு திறக்கும் நேரத்தில் உண்ணும் உணவை இஃப்தார் என்றும் குறிப்பிடுவார்கள்.நோன்பு காலங்களில் பயன்படுத்தப்படும் உணவுகளில் குறிப்பாக தண்ணீர்,நோன்பு கஞ்சி, பேரிச்சை பழம், பழரசம், பழவகைகள், வடை மற்றும் சமோசா, அசைவ உணவுகள் ஆகியவைகள் முக்கியமாக இடம்பெறும்.மேலும் இஸ்லாமிய மக்கள் நோன்பு திறப்பதற்கு சாதி – மதம் – இனம் – மொழி – நிறம் – அரசியல் பாகுபாடு மற்றும் வித்தியாசம் பாராமல் அனைத்து தரப்பு மக்களும் நோன்பாளிகளை கண்ணியப்படுத்தும் வகையில் நோன்பு திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுத்து ஒன்று கூடி இஃப்தார் விருந்து கொடுத்து மகிழ்வது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.மேலும் நாட்டின் பல மாநிலங்களிலும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பெரும் நிறுவனங்கள் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதில் முதலமைச்சர்கள் முதல் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் வரை கலந்து கொண்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.இம்மாதத்தில் மட்டும் தான் இரவு நேர சிறப்பு தொழுகையான தராவீஹ் தொழுகையானது அனைத்து மசூதிகளிலும் நடைபெறும்.மேலும் குறிப்பாக முதியோர்கள், நோயாளிகள், பயணத்தில் இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் மாதவிடாய் காலத்தில் உள்ளவர்கள் ஆகியோர்களுக்கு நோன்பு வைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்து இஸ்லாமியர்களின் நான்காவது கடமையானது ஜகாத் ஆகும். இஸ்லாத்தில் தொழுகை இறை வணக்கம் எவ்வளவு முக்கியமோ அதே போல் ஜகாத் என்பதும் மிக முக்கியமானது. இந்த ஜகாத்தின் முக்கிய நோக்கமானது ஏழை எளியோர்களுக்கு உதவுதல் மற்றும் நம்மிடம் உள்ள செல்வங்களை தூய்மைபடுத்துவது என்கின்ற பொருளின் அடிப்படையில்அதாவது நம்மிடம் உள்ள கஞ்சத்தனம், பேராசை மற்றும் தீய எண்ணங்களிலிருந்து விலகி தூய்மைப்படுத்தபடுவதாகும். ஜகாத்தின் சிறப்பை சொல்வது என்றால்“தண்ணீர் நெருப்பை அணைப்பது போல செய்யும் தர்மமானது பாவத்தை அழித்துவிடும்”
இத்தகைய சிறப்புமிகு ஜகாத்தை, முஸ்லிம்கள் அனைவரும் தங்களிடம் உள்ள சொத்துக்களில் ரொக்க பணம், சேமிப்பு, தங்கம், வெள்ளி, வணிகம் மற்றும் முதலீடுகனின் மொத்த மதிப்பில் ஏழைகளுக்கும், தகுதியுடையவர்களுக்கும் தன்னிடம் உள்ள செல்வத்தில் ஒரு பகுதியை தானமாக வழங்குவது குறைந்தபட்சம் 2.5% சதவீதம் ஜகாத் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஜக்காத்தை பெற தகுதி உள்ளவர்கள் ஏழை எளிய மக்கள் ஆதரவற்றவர்கள் மற்றும் நலிந்த கல்வி நிறுவனங்களும் இதில் அடங்கும்.அடுத்ததாக இந்த சங்கைமிகு ரமலான் மாதத்தில் லைலத்துல் கத்ர் எனும் சிறப்புமிக்க இரவானது, திருக்குர்ஆன் அருளப்பட்ட இரவாகவும், மற்றும் இந்த இரவில் தொழும் தொழுகையானது ஆயிரம் மாதங்கள் தொழும் தொழுகையில் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மையை தர கூடிய கண்ணியமிக்க இரவாகவும் திகழ்கிறது. இந்த சிறப்புமிகு இரவில் முஸ்லிம்கள் அதிக அளவில் இறைவனை தொழுது பிரார்த்தனை செய்தும் மற்றும் நன்மை வேண்டியும், பாவ மன்னிப்பினை கோரியும் தொழுது பிரார்த்தனை செய்வார்கள். இந்த சிறப்புமிகு இரவினை இஸ்லாமியர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.மேலும் ரமலான் மாதத்தின் இறுதியில் பெருநாள் (ஈத்) தொழுகைக்கு முன்பே ஃபித்ரா எனும் வாஜிபான தர்மம் செய்ய வேண்டியது ஒரு முக்கியமான தர்மச் செயல் ஆகும்.
இத்தகைய சிறப்புகளைக் கொண்ட ரமலான் மாதத்தில் மேற்கண்ட முறையில் ரமலான் நோன்பினை இஸ்லாமிய பெருமக்கள் கடைப்பிடித்து, தங்களின் கடமைகளை நிறைவேற்றி தங்களின் வாழ்வியலில் தங்களை புதிய மனிதர்களாக மாற்றி அமைத்து பொறுமை, சுய ஒழுக்கம், நற்பண்புகள் மற்றும் மறுமை நாள் குறித்த எண்ணங்களை மனதில் சுமந்து பிறை கண்டு ரமலான் பெருநாளை குடும்பத்தினர் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் என அனைவரும் ஒன்று கூடி, மனிதம் ஒன்றே சிறந்தது என்ற ஒற்றை சிந்தனையில், இஸ்லாமியர்களின் பண்டிகை என்றாலே நினைவிற்க்கு வருவது அவர்கள் கை பக்குவத்தில் உருவாகும் பிரியாணியைதான் அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். உறவினர்கள், அண்டை, ,அயலார் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் பிரியாணி வழங்கி, மகிழ்ச்சிகளை பரிமாறி, பரிசுகளை வழங்கி ஒருவருக்கொருவர் அன்புடன் ஆரத்தழுவி மகிழ்வுடன் ரமலான் பெருநாளை கொண்டாடி மகிழும் உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி தமது ரமலான் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்