மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசித் திருவிழா கோலாகலம் : 11-ம் தேதி ஒடுக்கு பூஜை!
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கொடை விழாவின் முக்கிய நிகழ்வான ‘வலிய படுக்கை’ என்னும் நிகழ்ச்சி 11-ம் தேதி நடைபெறஉள்ளது.
பெண்கள் மட்டுமே இருமுடி கட்டி விரதம் இருந்து செல்லும் ஆலயங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி மாதம் நடைபெறும் மாசி திருவிழா தற்போது நடைபெற்றுவருகிறது.இந்த விழாவின்போது, பெண்கள் -அதுவும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் விரதம் இருந்து, தலையில் இருமுடி கட்டி வந்து, பொங்கல் வைத்து வழிபட்டுத் திரும்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த ஆண்கள், கேரளாவில் உள்ள ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கில் செல்வதுபோல, அங்குள்ள பெண்கள் பலரும் தமிழகத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மனை தரிசிக்க, மாசி மாதம் நடைபெறும் திருவிழாவின்போது வருகை தருவார்கள்.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான மாசி கொடை விழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. வருகிற 11-ந் தேதி செவ்வாய்க்கிழமை வரை விழா நடைபெற உள்ளது.
கொடை விழாவின் இறுதிநாளில் நடைபெறும் ‘வலிய படுக்கை’ என்னும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது என பக்தர்களின் நம்பிக்கை. அப்போது கூடை கூடையாய் பூக்கள், பழங்கள், பலகாரம், வடை, அப்பம், திரளி ஆகியவற்றை, பக்தர்கள் தங்களின் வாயை மூடியபடி ஊர்வலமாக பாத்திரங்களில் எடுத்து வந்து அம்மன் சன்னிதி முன்பாக படைத்து வழிபடுவார்கள். மேலும் இந்த படைப்புக்குரிய சாதம் ஒரே நாளில் தயாரிக்கப்பட்ட புழுங்கல் அரிசியில் சமைக்கப்படுவது என்பது கூடுதல் விசேஷம்ஆகும் .மேலும் வலிய படுக்கை என்ற ஒடுக்கு பூஜையின்போது கோவில் நிசப்தமாக இருக்கும். நள்ளிரவில் நடைபெறும் இந்த பூஜையுடன் மாசிக் கொடை விழா நிறைவு பெறும்.