அரசு மருத்துவமனையில் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் சிகிச்சை பெற்ற குழந்தை மரணம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 6 மாத கைக்குழந்தை புதன் கிழமை அதிகாலை உயிரிழந்தது.குழந்தைக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், முறையாக சிகிச்சை அளிக்க உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு தெரிவித்து, குழந்தையின் உறவினர்கள் அரசு மருத்துவமனை வாயிலில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.வந்தவாசி கோட்டை தெருவை சேர்ந்தவர் இப்ராஹிம் மூசா. இவருடைய 6 மாத கைக்குழந்தை முகமதுரசூல், சளி மற்றும் காய்ச்சல் காரணமாக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூன்று நாட்களாக குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது.இந்த நிலையில் செவ்வாய் மாலை 6 மணி அளவில் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் சளி அதிகமாக இருந்த காரணத்தால் பால் குடிக்காமல் சிரமப்பட்டு வந்த நிலையில் குழந்தைகளின் பெற்றோர் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கூறிய போது அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன் கிமை அதிகாலை குழந்தை உயிரிழந்தது. இதனால், ஆத்ரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை வாயிலில் உள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வந்தவாசி – மேல்மருவத்தூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த செய்யாறு சார் ஆட்சியர் அனாமிகா, மாவட்ட மருந்துவ இணை இயக்குனர்கள், பாபு, ஏழுமலை, ஆகியோர் குழந்தையின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, குழந்தை இறப்பு குறித்த உரிய விசாரணை தேவை, வந்தவாசி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் என, உயிரிழந்த குந்தையின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து, அவர்களின் கோரிக்கை குறித்து, 1 மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதால் சாலைமறியல் கைவிடபட்டது. அதிகாலை இருந்து நடைபெற்ற போராட்டம் 5 மணி நேரம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.