விளையாட்டு வீரர் ஆகாஷ் உடல் கைவண்டூர் கிராமம் கொண்டுவரப்பட்டது
திருவள்ளூரை அடுத்த,கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நேருதாசன் ஓய்வு பெற்ற தடகள விளையாட்டு வீரரான இவரது மகன் ஆகாஷ்( 27) பல்கலைக்கழகம் மற்றும் மாநில அளவிலான வாலிபால் விளையாட்டில் சிறந்து விளங்கிய வீரர். இவர் கடந்த 21-ந் தேதி அன்று,நேபாளத்தின் போக்ரா நகரில், ரங்கசாலா விளையாட்டு மைதானத்தில் நடந்த வாலிபால் போட்டியில் பங்கேற்க சென்றார். கடந்த 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை 10 மணி அளவில் முதல் சுற்றில் விளையாடிய பின்னர் ஓய்வு எடுக்க அறைக்கு சென்றார்.அங்கு வாந்தி எடுத்ததோடு நெஞ்சுவலியும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சக விளையாட்டு வீரர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு, பரிசோதித்த மருத்துவர், ஆகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆகாஷின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேபாளத்தில் உயிரிழந்த மகனின் உடலை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவன் சாவில் மர்மம் இருப்பதாகவும் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நேபாளத்தில் இருந்தது டெல்லி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஏர்இந்தியா விமானம் மூலம் உடல் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆகாஷின் உடல் உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் விமான நிலையத்தில் இருந்து தனி வாகனத்தில் வாலிபால் வீரர் ஆகாஷின் சொந்த ஊரான திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அந்த வாகனத்துடன் வாலிபால் விளையாட்டு வீரருக்கு மரியாதை செய்யும் விதமாக அவரது நண்பர்கள் உறவினர்கள் இருசக்கர வாகனத்தில் 300க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆயில் மில் அம்பேத்கர் சிலை துவங்கி கைவண்டூர் கிராமம் வரை அமைதிப் பேரணி சென்று அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு கைவண்டூர் கிராமத்தில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள், சக வாலிபால் விளையாட்டு வீரர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது காண்பவர்களை கண் கலங்க செய்தது. மேலும்,வாலிபால் விளையாட்டு வீரர் ஆகாஷ் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிய பள்ளியில் உடன் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் உட்பட உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். நேபாள நாட்டில் வாலிபால் விளையாடிய போது ரத்த வாந்தி எடுத்து மயங்கி உயிரிழந்த ஆகாஷ் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அதை மத்திய மாநில அரசுகள் உரிய முறையில் விசாரணை செய்திட வேண்டும். வாலிபால் விளையாட்டு வீரரும் தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியருமான ஆகாஷின் குடும்பத்திற்கு உதவிட வேண்டுமென்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.