கோடுவெளி ஊராட்சியில் சுடுகாடு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை தட்டிக்கேட்ட வழக்கறிஞரை திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் அடியாட்கள் மற்றும் துணைத் தலைவரும் தாக்கியதாக புகார்
![]()
திருவள்ளூர் நவ 06 :
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கோடுவெளி ஊராட்சியில் உள்ள அம்மணம்பாக்கம் கிராமத்தில் சுடுகாட்டுப் பாதை மற்றும் வண்டிப்பாதை ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்வதாகவும், அதற்கு பட்டா வழங்கக் கூடாது என அதே பகுதியைச் சேர்ந்த முனிவேல் என்ற வழக்கறிஞர் திருவள்ளூர் வட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
வருவாய்த் துறையினரும் அரசுக்கு சொந்தமான நிலத்தை அளவீடும் செய்தனர். இந்நிலையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் தனி நபர் ஆக்கிரமித்து வீடும் கட்டியுள்ளதால் அந்த வீட்டிற்கு செல்ல சரியான பாதை இல்லாததால் சாலை அமைக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் முயன்றுள்ளனர். இது குறித்து வழக்கறிஞர் முனிவேலுவின் சகோதரர் ராஜகணேசன் சென்று கேட்ட போது திமுகவைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர் சித்ராவின் கணவர் குமாரின் அடியாட்கள் மற்றும் துணைத் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட 15 பேர் ராஜகணேசனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இது குறித்து வழக்கறிஞர் முனிவேல் சென்று கேட்டுள்ளார். இந்த நிலம் சம்பந்தமாக பொது நல வழக்கும் தொடர்ந்த நிலையில் ஏன் சாலை அமைக்கிறீர்கள் என கேட்ட போது துணைத் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் வழக்கறிஞர் முனிவேலையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து வெங்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த முனிவேல் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அரசுக்கு சொந்தமான நிலத்தை திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத்தலைவரின் கணவர் குமார் மற்றும் துணைத் தலைவர் சரத்குமார் ஆகியோர் அபகரிப்பதாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்த வழக்கறிஞரையும், அவரது சகோதரரையும் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்கறிஞரான தனக்கே உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலை இருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் முனிவேல் கேட்டுக்கொண்டார். ஆளுங்கட்சியான திமுக வில் இருப்பதால் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றும், தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

