அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் தனித்திறன்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் நோக்கத்தில் “காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி
திருவள்ளூர் அக் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் தனித்திறன்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி மூலம் கலெக்டரை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சி மூலம் வாரந்தோறும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து ஊக்கப்படுத்தியும் வருகிறார்.
அதன்படி சோழவரம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் 10 முதல் பிளஸ் 2 வரையில் படித்து வரும் மாணவ, மாணவிகள் 20 பேர் கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார். அதையடுத்து பள்ளிப் பருவத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்கான தனித்திறமைகளை கட்டாயம் வளர்த்துக் கொண்டு, இந்த சமூகத்திற்கு சிறந்த பங்காற்ற வேண்டும் என ஊக்கப்படுத்தினார். அதைத் தொடர்ந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாகவும் வழங்கினார்.இதில் பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) உமா மகேஸ்வரி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மலர்கொடி, பள்ளித் துணை ஆய்வாளர் பிரேம்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பவானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.